தமிழ்நாடு

tamil nadu

சீனாவுக்கு நெருக்கடி தரும் குவாட் கூட்டணி!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக குவாட் அமைப்பின் நோக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது. 2017 முதல் பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதன் விளைவு வியூக ரீதியான கூட்டணி உருவானது.

By

Published : Mar 18, 2021, 10:27 PM IST

Published : Mar 18, 2021, 10:27 PM IST

குவாட்
குவாட்

ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வியூக ரீதியான கூட்டணியே நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை என்றழைக்கப்படும் குவாட் கூட்டணி. இந்த ஆக்கப்பூர்வமான தொலைநோக்குப்பார்வை கொண்ட அமைப்பு, 2004ஆம் ஆண்டு, சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது. அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டதோ அதன் நோக்கம் என்பது 2007ஆம் முதல் செயலற்றதாக மாறியது.

இந்த நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக குவாட் அமைப்பின் நோக்கம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெறத் தொடங்கியது. 2017 முதல், பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதன் விளைவு வியூக ரீதியான கூட்டணி உருவானது.

அமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் சீனாவின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. இருப்பினும், கூட்டணி நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் நோக்கம் தெளிவாகிறது. வாசுதேவ குடும்பகம் (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்-இறைவனின் குடும்பம்) என்ற இந்தியாவின் தத்துவார்த்த கொள்கையின் சின்னமாக விளங்கும் குவாட் கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் மேற்கொண்ட முயற்சிகள், காலநிலை மாற்றம், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை உலகளாவிய நன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.

கரோனா தடுப்பூசி, காலநிலை மாற்றம், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய விவகாரத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்படும் எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

46.3 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீனா தயாராகிவரும் நிலையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 24 நாடுகளுக்கு 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை வழங்க குவாட் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் நிபுணத்துவத்தில் ஜப்பான், அமெரிக்க நாடுகளின் நிதியுதவியுடன் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்கவுள்ளது.

எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டு உறுப்பு நாடுகளின் நலனைப் பாதுகாக்க குவாட் உறுதி அளித்துள்ளது. சீனாவின் பொருளாதார, வர்த்தக, ராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள குவாட் ஒரு நல்ல முன்முயற்சி.

நேட்டோ அமைப்பில் இல்லாமல் குவாட் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரே நாடு இந்தியாதான். சீனாவுடன் நீண்ட எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்தியா, அந்நாட்டுடன் பல எல்லைப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. நாட்டின் தலைமைப் பண்பு என்பது பலத்திற்கு இணையாகப் பணிவாக இருப்பதே என்ற சீன தலைவர் டெங் ஜியாவ்பிங்கின் வார்த்தைக்கு நேர் எதிராக அந்நாடு செயல்பட்டது. எல்லைப் பகுதிகளை அபகரித்து அண்டை நாடுகளுடன் அதிரடியான போக்கை கடைப்பிடிக்கும் சீனாவின் கொள்கைகளால் பிராந்தியத்தில் பதற்றம் தீவிரமாகியுள்ளது.

சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்றபோது, புதிய பஞ்சசீல கொள்கைகளை வகுக்க வேண்டும் என அறைகூவல்விடுத்தார். ஆனால், தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்தில் இந்திய இணைய மறுத்ததற்குப் பிறகு அவரின் தொனியில் மாற்றம் தென்பட்டது.

சீனா, 2017ஆம் ஆண்டு மேற்கெண்ட ஒப்பந்தத்தை மீறி டோக்லாம் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது. வூஹான், மகாபலிபுரம் உச்சி மாநாடுகளின் மூலம் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் அளித்த அதே நேரத்தில், லடாக்கில் இந்தியாவுடன் சீனா மோதல் போக்கையே கடைப்பிடித்தது. கிட்டத்தட்ட 22,000 கிமீ தொலைவை 14 நாடுகளுடன் சீனா எல்லையாகப் பகிர்ந்துகொள்கிறது. அதில், 14 நாடுகளுடனுமே மோதல்போக்கு நீடித்துவருகிறது.

மியான்மர், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கடற்படைத் தளங்களைக் கொண்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுகிறது. இதனால், இந்தியாவின் கழுத்தை எதிரிகள் சூழ்ந்துள்ளனர்.

வரலாற்று ரீதியாகவே தென் சீனக்கடலில் அனைத்துவிதமான உரிமைகளையும் நிலைநாட்டிவரும் சீனா, செயற்கைத் தீவுகளையும் ராணுவ தளங்களையும் கடலில் உருவாக்கிவருகிறது. அந்த வகையில், சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறியும் செயல்பட்டுள்ளது.

சீனாவின் இந்த மோதல் போக்கின் விளைவாக, குவாட் போன்ற அமைப்பு உருவானதில் எந்தவிதமான விசித்திரமும் இல்லை. நேட்டோவின் ஆசிய அவதாரமே குவாட் என சீனா விமர்சித்துள்ளது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட அமைப்புகளில் எதிர்மறையான சக்தியாக இந்தியா மாறியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

குவாட் அமைப்பின் அடித்தளமாக உருவெடுத்து ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பாக அந்த அமைப்பை இந்தியா மாற்றி சீனாவுக்கு செக்வைக்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details