தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மாணவர்கள் கண்டறிந்த சிந்து சமவெளி நாகரீகக் குறியீடுகள்! - ramanathapuram news

உத்தரகோசமங்கை அருகே சிந்து சமவெளி குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

indus valley tamil land pottery pieces
indus valley tamil land pottery pieces

By

Published : Mar 13, 2021, 10:37 AM IST

ராமநாதபுரம்: சிந்துவெளி நாகரீகத்தின் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகளை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

உத்தரகோசமங்கை அருகில் மரியராயபுரம் என்ற ஊர் கண்மாய் பொட்டலில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விஷால், அருள்தாஸ் ஆகியோர் ஆசிரியர் முனியசாமியுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபோது, 20 பானை ஓடுகளில் குறியீடுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவுக்குத் தகவல் தந்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுசெய்த ராஜகுரு நுண்கற்காலக் கருவி, ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடு, கறுப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், துளையுள்ள பானை ஓடுகள், சிவப்புநிற சிறிய குவளை, சிறிய இரும்புக் கோடாரி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், நீர் ஊற்றும் பகுதியுடைய பானையின் விளிம்புப் பகுதிகள், அலங்காரப் பானை ஓடு, சங்கு வளையல், பாசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பொட்டல் பகுதி முழுவதும் பழமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

பானை ஓட்டில் குறியீடுகள்

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 குறியீடுகளில், கறுப்பு சிவப்பு பானை ஓடுகளில் 15 குறியீடுகளும், சிவப்பு பானை ஓடுகளில் 5 குறியீடுகளும் உள்ளன. இதில் உள்ள 3 குறியீடுகள் சிந்துசமவெளி பகுதியில் கிடைத்த குறியீடுகள் எண் 125, 137, 365 போல அமைந்துள்ளன. இதில் எண் 125 குறியீடு ‘த’ எனும் தமிழி எழுத்து போலவும், எண் 137 குறியீடு பெருக்கல் குறியீடு போலவும் அமைந்துள்ளன. எண் 365 குறியீடு மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் சூலம் போல உள்ளது. இக்குறியீடு கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கண்டறிந்த சிந்துவெளி நாகரீக குறியீடுகள்

மற்றொரு குறியீட்டில் இரண்டு ஏணிகளை எதிரெதிரே வைத்தது போல் உள்ளது. பொதுவாக தொல்லியல் ஆய்வுகளில் பொருள் புரிய இயலாத வரிவடிவங்கள், கீறல்களைக் குறியீடுகளாகக் கருதுகிறார்கள். இவை தொல் எழுத்துகளாகவும் இருக்கலாம். இங்குக் கிடைத்த பெரும்பாலான குறியீடுகள் கிண்ணம், குவளை, தட்டு உள்ளிட்ட மட்கலங்களின் தோள் பகுதிகளில் கீறப்பட்டவையாகவே உள்ளன.

யார் இந்த மாணவர்கள்

கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியரான முனியசாமியின் வழிகாட்டலில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விஷால், அருள்தாஸ் ஆகிய இருவரும் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே கீழக்கரை அருகில் குலபதத்தில் சீனநாட்டுப் பானை ஓடுகள், மேலமடையில் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு, நத்தத்தில் சங்ககால ஊர் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.

குறியீடுகள் புதைந்து கிடக்கும் இடம்

கீழக்கரையிலிருந்து தேரிருவேலி வழியாக மதுரை செல்லும் வழியில் மரியராயபுரம் அமைந்துள்ளது. தேரிருவேலியில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் ரோமானிய பானை ஓடுகள், நுண்கற்காலக் கருவிகள், தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேர்பாதையில் இங்கிருந்து தேரிருவேலி 4 கி.மீ. தூரத்தில் தான் உள்ளது. சமீபத்தில் ரோமானிய பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ச்சீத்தை இவ்வூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இவ்வூர் மக்களின் வாழ் விடப்பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து இப்பகுதியின் தொன்மையை வெளிக்கொணரவேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details