தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 24, 2020, 7:50 PM IST

ETV Bharat / jagte-raho

மயக்கும் பெண் குரல்... மயங்கிய ஆண்கள்... திணறிய காவல்துறை...!

சென்னை: ’ஹலோ... ஹாய்... நான் பிரியா பேசுறேன்...’ என்ற மயக்கும் பெண் குரல், 1000-க்கும் மேற்பட்ட ஆண்களின் தூக்கத்தை இவ்வளவு நாள் தொலைத்தது. ஆனால், அக்குரலுக்குச் சொந்தக்காரரும் இனி தூக்கத்தை தொலைக்கப் போகிறார். நூதன முறையில் ஆண்களிடம் மோசடி செய்து சொத்துகளைக் குவித்தவரின் பகீர் கதையை இப்போது பார்க்கலாம்...

call
call

’ஹலோ... ஹாய்... நான் பிரியா பேசுறேன்...’ இப்படித் தொடங்கும் பெண் குரலில் மயங்கி ஒன்றல்ல... இரண்டல்ல... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வலையில் விழுந்துள்ளனர். ஆனால், வலையில் விழுந்த எவரும் இச்செய்தி தெரிந்த பின்னர் அதிர்ந்துதான் போவார்கள். ஏனெனில், இப்படிப் பேசி பலரை மோசடி செய்த அப்பெண்ணை பிடித்தே தீருவது என்றெண்ணிப் போன காவல் துறையும் அதிர்ந்துதான் போனது!

பெண்ணை ஏமாற்றியதாகக் கூறி ஒரே மாதிரியான புகார்கள், மயிலாப்பூர் காவல் நிலையம், சைபர் கிரைம் பிரிவில் வருவதும், ஆன்லைன் மூலம் கொடுக்கப்படும் இது தொடர்பாக புகார்தாரரை அணுகும்போது, அவர்கள் இப்புகாரை கொடுக்கவில்லை என மறுப்பதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஒருவரின் உறவினர் உதயராஜ் என்பவரும், இதேபோன்று புகார் கொடுத்ததாகக் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

விசாரணையில், வேலைக்காக லோகண்டோ என்ற செயலி மூலம் விண்ணப்பித்ததாகவும், அப்போது 100 ரூபாய் செலுத்தி ஆபாசமாக உரையாடலாம் என பிரியா என்ற பெண் விளம்பரம் செய்ததைப் பார்த்து பணம் செலுத்தியதாகவும் உதயராஜ் தெரிவித்தார். 100 ரூபாய் அனுப்பியவுடன் பிரியாவின் நிர்வாணப் படம் தனது செல்போனுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து, வீடியோ காலில் பேச 1500 ரூபாய் செலுத்துமாறு பிரியா கேட்டு தகவல் வந்தவுடன் 1500 ரூபாயையும் செலுத்தியுள்ளார் உதயராஜ். பின்னர் வீடியோ காலில் ப்ரியா வராததால் ஏமாற்றமடைந்த உதயராஜுக்கு அவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்திதான் வந்தது. உதயராஜை விசாரணைக்கு அழைக்கும்போதுதான், இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து உதயராஜுக்கு வந்த செல்போன் அழைப்பின் சமிக்ஞை (சிக்னல்), திருநெல்வேலி மாவட்டம் பணங்குடியைக் காட்ட, பிரியாவை பிடிக்க விரைந்தது காவல் துறை. அங்குபோன பிறகுதான் தெரிந்திருக்கிறது, தனது மயக்கும் குரலால் பேசி பல ஆண்களை வலையில் வீழ்த்தியது பிரியா அல்ல, பெண்குரலில் பேசி மோசடி செய்த ராஜ்குமார் ரீகன் என்ற இளைஞர் என்பது!

வசமாகச் சிக்கிய ராஜ்குமார் ரீகனிடம் விசாரித்ததில், 2015ஆம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண் குரலில் பேசி ஆபாச உரையாடலுக்கு அழைத்து மோசடி செய்துள்ளதாகவும், பல பெண்களின் நிர்வாணப் படங்கள், வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிடம் காவல் துறையில் மாட்டிவிடுவேன் எனக்கூறி, ஆன்லைன் புகார் கடிதத்தை அனுப்பி மிரட்டி பணம் பறித்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மயக்கும் பெண் குரல்...மயங்கிய ஆண்கள்...திணறிய காவல்துறை...

ராஜ்குமார் ரீகன் லொகண்டோ செயலி மூலம், ஆபாசமாக ஒரு மணி நேரம் பேச ஆயிரம் ரூபாய், ஆபாசமாக வீடியோ காலில் பேச 1,500 ரூபாய், குறுஞ்செய்தி மூலம் ஆபாசமாக பேச 500 ரூபாய், என அட்டவணை போட்டு, பிரியா, ரூபா என்ற பெயர்களில் பலரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பொறியியல் பட்டதாரியான ரீகன் இப்படி மோசடி செய்தே வீடு, கார் என சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்கள், துபாய், மலேசியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்களை இவர் ஏமாற்றியதும், காவல் துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, துபாயிலிருந்து ஒருவர் ரீகனின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் செலுத்திய குறுஞ்செய்தி வந்ததும் காவல் துறையை நிலைகுலைய செய்திருக்கிறது.

ரீகன் மீது மோசடி செய்து பணத்தைப் பறித்தல், தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இன்று ரீகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பொண்ணுங்கள கேலி செய்வீங்களா' - விடுதிக்குள் நுழைந்து அடித்து நொறுக்கிய 20 பேர்!

ABOUT THE AUTHOR

...view details