தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு!

By

Published : Aug 14, 2020, 2:49 PM IST

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் விநாயகர் கோயிலில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான உற்சவர் சிலை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு!
ஈரோட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருட்டு!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி கல்யாணசுந்தரனார் வீதியில் வெற்றி விநாயகர் திருக்கோயில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி மக்கள் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட அந்த கோயிலில் தொடர்ந்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த கோயிலில் தொடர்ந்து பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் ஐந்து நாள்களுக்கு முன் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழே வருவாய் பெறும் கோயில்கள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து கடந்த சில நாள்களாக பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல, நேற்றிரவு (ஆகஸ்ட் 13) இரவு நேர பூஜையை முடித்த பூசாரி, கோயிலை பூட்டிச் சென்று விட்டு, இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை பூஜைக்காக கோயிலை திறக்க வந்துள்ளார்.

அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே மூலவருக்கு அருகாமையில் இருந்த பழமையான ஐம்பொன்னாலான உற்சவர் முருகன் சிலை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த நிர்வாகிகள், சூரம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோயிலை பூட்டிச் சென்ற பிறகு நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கோயிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடிச் சென்றதும், அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details