சென்னை: சிபிஐ பறிமுதல்செய்த தங்கத்திலிருந்து 103 கிலோ மாயமானது தொடர்பான வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2012ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து சென்னையிலுள்ள சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் சிபிஐ அதிரடியாகச் சோதனை நடத்தியது. சட்டவிரோத தங்க இறக்குமதி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 400 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.
பறிமுதல்செய்யப்பட்ட தங்கம் அனைத்தையும் அந்த நிறுவனத்திலேயே, 72 சாவிகள் கொண்ட பெட்டகத்தில் பத்திரமாக முத்திரையிடப்பட்டு சிபிஐ அலுவலர்கள் வைத்திருந்தனர். இச்சூழலில் சுரானா கார்ப்பரேஷன் பல வங்கிகளில் வாங்கிய 1160 கோடி ரூபாய் கடனுக்காக, சீல்வைக்கப்பட்ட தங்கத்தை வங்கியிடம் ஒப்படைப்பதற்குச் சிறப்பு அலுவலரான ராமசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி மாதம் தனியார் நிறுவனத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கத்தை சிறப்பு அலுவலர் எடுத்து எடை பார்த்தபோது, 103 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சிபிஐ பறிமுதல்செய்த தங்கத்தில், மாயமான 103 கிலோ தங்கம் தொடர்பாக சிபிஐ திருட்டு வழக்குப்பதிவு செய்ய சட்டப்படி இடமில்லாததால், சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு அனைத்து தரப்பிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் சிபிஐ அலுவலர்களுக்குத் தொடர்புள்ளதா என உள்ளீட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு விசாரணை நடத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்கு, திருட்டு தொடர்பான புகார் என்பதால், முறைப்படி சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ராம சுப்பிரமணியன் சிபிசிஐடியிடம் புகாரளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக சிறப்பு அலுவலரான ராம சுப்பிரமணியன் வெளிநாடு சென்றுள்ளதால் சிபிசிஐடியிடம் இன்னும் புகார் வரவில்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஆவதாகவும், புகாரளித்தால் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.