சென்னை அசோக் நகரில் உள்ள சிண்டிகேட் வங்கியின் மேலாளர் அனந்தகுமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "அசோக்நகர் சிண்டிகேட் கிளையில் கார்களுக்கான கடன் வழங்கப்படுகிறது. அதனைப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் மூலம் எட்டு கார்களுக்கு 60 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், கார்களுடைய ஆவணங்களைப் போலியாக தயாரித்து வங்கியில் கடன் பெற்றதும், கொடுங்கையூரில் கணினி மையம் நடத்திவந்த சதீஷ் என்பவர் போலியாக ஆவணங்கள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான கொடுங்கையூரைச் சேர்ந்த சதீஷ்குமாரை காவல் துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த இவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இவர் சென்னை சட்டக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு உயர் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
இதனால், மோட்டார் வாகன விபத்து, மோட்டார் வாகன கடன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இவர் தனது பெயரில் போலியான ஆவணங்கள் தயாரித்து சிண்டிகேட் வங்கியின் மற்றொரு கிளையில் தன்னுடைய சொந்த உபயோகத்திற்காக கடன் மூலம் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதன்மூலம் வங்கியில் கார் கடன் வாங்குவதற்கான அனைத்து நெளிவு சுழிவுகளையும் தெரிந்து கொண்டுள்ளார்.
பின்னர் தனக்கு தெரிந்த நபர்களை வைத்து அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரகு என்று பேசி, அவர்கள் பெயரில் போலியான ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து, அவர்களை சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்குவதற்காக விண்ணப்பிக்க செய்வதும், அவர்களுக்கு கார் வழங்கக்கூடிய டீலராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வங்கியில் இருந்து கார் வாங்குவதற்காக அளிக்கப்படும் தொகையை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு வருமாறு பார்த்துக் கொண்டுள்ளார்.
இப்படியாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை வைத்து போலியான ஆவணங்களைத் தயாரித்து சுமார் 60 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்ற மோசடியில் வாங்கியின் உதவியின்றி இது நடந்து இருக்குமா என்ற கோணத்தில் வங்கி மேலாளரிடம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.