தமிழ்நாடு

tamil nadu

ஈகுவடரின் பாப்லோ எஸ்கோபர்! சிறையில் இருந்து தப்பியது எப்படி? ஒரு கைதிக்காக அவசர நிலை பிரகடனமா? யார் இவர்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 4:59 PM IST

ஈகுவடார் நாட்டை சேர்ந்த பிரபல தாதா ஜோஸ் அடோல்போ மசியாஸ் வில்லமர் சிறையை விட்டு தப்பிச் சென்ற நிலையில், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ரவுடி சிறையில் இருந்து தப்பியதற்கு நாட்டிற்கே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ள விநோத நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

José Adolfo Macías Villamar
José Adolfo Macías Villamar

க்யுட்டோ:ஈகுவடார் நாட்டை சேர்ந்தது லாஸ் சோனெரோஸ் கும்பல். ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கூலிப் படை தாக்குதல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலின் தலைவனாக தாதா ஜோஸ் அடோல்போ மசியாஸ் வில்லமர் என்பவர் உள்ளார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாதா ஜோஸ், கடந்த 2011ஆம் அண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் இருந்து தாதா ஜோஸ் தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் அந்நாட்டில் கட்டுக்கடங்காத கலவரம் மூலத் தொடங்கியது.

அண்மையில் அவரது சில ரவுடிகள் ஈகுவடார் நாட்டின் தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் நுழைந்து துபாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை காண்பித்து மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. ஒட்டுமொத்த நாட்டையும் இந்த சம்பவம் திருப்பிப் போட்ட நிலையில், பல்வேறு இடங்களில் கலவரம் தலைவிரித் ஆடத் தொடங்கின.

பொது இடங்களை தவிர்த்து, சிறைச் சாலைகளிலும் கைதிகள் கும்பல் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாதா ஜோஸ் சிறையில் இருந்து தப்பியதை அடுத்து நாட்டில் போதை பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அதிபர் டேனியல் நோபோவா, அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். சிறையில் இருந்து தப்பிய தாதா ஜோசை கைது செய்யவும், அவரது கும்பலின் அட்டூழியங்களை கட்டுப்படுத்தவும் ராணுவத்திற்கு அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.

44 வயதான தாதா ஜோஸ், மனாபி மாகாணத்தில் உள்ள மன்டா என்ற துறைமுக நகரை சேர்ந்தவராவார். சிறு வயது முதலே குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஜோஸ், லாஸ் சோனெரோஸ் என்ற கும்பலை உருவாக்கி பல குற்றவாளிகளை ஒன்றிணைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, திட்டமிட்ட குற்றங்கள் என அடுத்த கட்டத்திற்கு தாதா ஜோசின் குற்றச் சம்பவங்கள் நீண்டு கொண்டே சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தாதா ஜோஸ் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு தாதா ஜோசை போலீசார் கைது செய்தனர். ஈகுவடார் நீதிமன்றம் தாதா ஜோஸ்க்கு 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், Guayaquil பகுதியில் உள்ள அதிக பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் இருந்து தப்பிப்பது என்பது தாதா ஜோஸ்க்கு ஒன்றும் புதிது அல்ல எனக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் கடந்த 2013ஆம அண்டு தாதா ஜோஸ் சிறையை விட்டு 5 கொலைக் குற்றவாளிகளுடன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 3 மாத போராட்டத்திற்கு பின்னர் ஜோசை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிறையில் இருந்து தாதா ஜோஸ் தப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இருக்கும் சிறையில் இருந்து வேறு சிறைக்கு தாதா ஜோசை மாற்ற நடவடிக்கை மேற்கொண்ட போது தான், அவர் சிறையை விட்டு தப்பியது தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு சிறைக் காவலர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறையிலும் தாதா போஸ் ராஜ வாழ்க்கை வந்ததாக கூறப்படுகிறது. சிறையின் முன்பகுதியில் நீச்சல் குளம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளுடன் தனக்கு ஏற்ற வகையில் சிறையை வடிவமைத்துக் கொண்டு ஜோஸ் நல்ல சொகுசு வாழ்க்கையை சிறையில் கழித்ததாக கூறப்பட்டு உள்ளது.

மேலும், சிறையில் இருந்தபடியே தனது சட்டவிரோத தொழில்களை கவனிப்பது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, ட்ரோன் ஆயுத விற்பனை உள்ளிட்ட அனைத்தையும் கண்காணித்து வந்ததாக சொல்லப்படுகிறது. சிறையின் அதிகாரிகள் உடந்தையின் பேரிலேயே தாதா ஜோஸ் இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், சிறையில் இருந்து தப்பிச் சென்ற தாதா ஜோஸ் அடோல்போ மசியாஸ் வில்லமரை மீண்டும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க :மெஹபூபா முக்தி சென்ற கார் விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

ABOUT THE AUTHOR

...view details