மாட்ரிட் (ஸ்பெயின்): இந்திய தலைநகரான டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப். 9,10) ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ள நிலையில், மாநாட்டிற்கான பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளனது.
மேலும், இந்த மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இந்திய விமான படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உட்பட வான்வழியேயான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று (செப்.7) வியாழக்கிழமை ஸ்பெயின் அதிபர் (Spain President) பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என x தளத்தில் (ட்விட்டர்) பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ இன்று மதியம் (நேற்று) எனக்கு கோவிட்-19 (COVID-19) தொற்று உறுதியாகி உள்ளது. எனவே என்னால் டெல்லிக்கு சென்று, ஜி-20 மாநட்டில் கலந்து கொள்ள முடியாது. நான் நன்றாக இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 மாநட்டில், ஸ்பெயினின் முதல் துணை அதிபர் நதியா கால்வினோ ஸ்பெயின் சார்பாக பிரதிநிதித்துவப்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட்-19 பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அவரது மனைவி ஜில் பைடனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.