துபாய்:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 26) ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் (Integrated Sewing Plants) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, துபாயைச் சேர்ந்த நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், உற்பத்தித் திட்டத்தினை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, டிரான்ஸ்வேல்டு குழுமம் 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உணவுப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற தன்னம்பிக்கை மொழியை ஏற்று துபாய்க்கு குடிபெயர்ந்து இந்த மண்ணையும் வளமாக்கியுள்ள எனது தமிழ்ச் சொந்தங்களே!. 50 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த இந்த துபாய், இன்று உலகமே வியந்து பார்க்கும் நகரமாக வளர்ந்திருக்கிறது.
இன்று நவீன கட்டடக்கலை சாதனைகளுடன் உலகளாவிய வணிக மையமாக மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி கற்பனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. உங்கள் ஊரின் புகழை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், நான் அறிந்தும் தெரிந்தும் வைத்திருப்பதை உங்களுடன் மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துத்தான் என்னுடைய உணர்வுகளை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
* 2217 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான புர்ஜ் கலிபா,
* செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜீமேரா தீவு,
* 5.5 கி.மீ நீளம் கொண்ட உலகிலேயே மிக நீளமான தங்கச் சங்கிலி,
* மிகப்பெரிய மால்கள்,
* மிகப்பெரிய மீன்காட்சியகம்,
* மலர் பூங்கா என துபாயில் பார்க்கும் இடமெல்லாம் பிரமிப்பாகவும் அழகாகவும் இருக்கிறது.
* பறக்கும் கார்கள் முதல் தானியங்கி ரயில்கள் வரை உயர் தொழில்நுட்பப் போக்குவரத்தில் தலைசிறந்து துபாய் விளங்கிக் கொண்டிருக்கிறது.
* துபாயின் அழகைக் கண்டு ரசிக்க ஆண்டு தோறும் சராசரியாக 17 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் எல்லா நாடுகளிலிருந்தும் வருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் துபாய் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தத் தான் நான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டி உங்களைத் தேடி, நாடி நான் வந்திருக்கின்றேன்.
முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபிறகு, நான் மேற்கொள்ளக்கூடிய முதலாவது அயல்நாட்டுப்பயணம் இந்தப் பயணம் தான், இந்த துபாய் பயணம் தான். இந்த முதல் பயணமும் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் நகரமாக அமைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்குதாரர்களில் ஒன்றாகவும், ஏற்றுமதிகளுக்கான மிகப்பெரிய நுழைவாயிலாகவும் துபாய் விளங்குகிறது.
துபாய் மக்கள், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் சட்டத்தை மதிக்கக்கூடிய நற்பெயரைப் பெற்றவர்கள். அதனால் தான் உங்களை நாடி நான் வந்திருக்கிறேன்.
ஐக்கிய அரபு நாடுகளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, துபாயை வெளிநாடாக நினைக்க முடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடாகவும் இது இருக்கிறது.
தமிழ்நாடு, வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் நிறைந்த ஒரு மாநிலம். கிட்டத்தட்ட ஏழரைக் கோடி மக்களைக் கொண்டிருக்கக்கூடிய மாநிலம்.