தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்கும் சதித் திட்டம் !

கொழும்பு : 20ஆவது சட்டத் திருத்தத்திற்கு பின்னால் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் சதித் திட்டம் உள்ளதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

By

Published : Oct 24, 2020, 3:36 PM IST

Updated : Oct 24, 2020, 4:18 PM IST

அரசியலமைப்பு திருத்தமானது தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்கும் சதித் திட்டம் !
அரசியலமைப்பு திருத்தமானது தமிழ் மக்களின் போராட்டங்களை நசுக்கும் சதித் திட்டம் !

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (அக்டோபர் 23) அரசியலமைப்பின் 20ஆவது சட்டத் திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய சி.வி.விக்னேஸ்வரன், "ஜனநாயகத்தில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் இந்த ஆட்சி நகர்கிறது. பெரும்பான்மையான மக்களிடம், சிறுபான்மையினரை பயங்கரவாதிகளைப் போல சித்தரிப்பதால் வாக்குகளைப் பெறலாம். ஆனால், ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது.

அத்தகைய இனவாதத்தை விதைத்து தனிமனிதர் ஒருவரிடம் அதிகாரத்தை குவிக்கும் எண்ணத்திலேயே இந்த 20ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் சாவு மணி அடிக்கப் போகின்றது. இன்று நீங்கள் கொண்டுவரும் இந்த சட்டத் திருத்தம், உங்களுக்கும், உங்களது எதிர்கால சந்ததியினருக்கும் தீங்கை ஏற்படுத்தும்.

யார் யாரெல்லாம் இந்த 20ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு பாடுபட்டார்களோ, யார் யாரெல்லாம் இதற்கு ஆதரவு அளித்தார்களோ அவர்கள் எல்லோரும் எதிர்காலத்தில் இந்த சட்டத் திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வீதிகளில் இறங்கி போராடும் நிலை நிச்சயம் ஏற்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

இந்த 20ஆவது சட்டத் திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அனுமதிக்காதீர்கள். மனித உரிமைகள், ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமாதானம் ஆகியவற்றை நேசிக்கும் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கொண்டுவந்த இந்த தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது கட்சியின் அறிவுறுத்தலை மீறி ஆதரித்துள்ளனர்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிற்கு உச்சபட்ச அதிகாரங்களை வழங்கும் இலங்கையின் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Last Updated : Oct 24, 2020, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details