தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆறு வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய இம்ரான் கான் மனு தள்ளுபடி! - தோஷகானா வழக்கு

மே 9 கலவர வழக்கு, நிதி மோசடி வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகளின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Pakistan
பாகிஸ்தான்

By

Published : Jul 28, 2023, 2:20 PM IST

பாகிஸ்தான்:பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏப்ரலில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். இதையடுத்து, இம்ரான்கானை கைது செய்யும் நோக்கில் அவர் மீது ஊழல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. தன்னை கைது செய்யவும், கொலை செய்யவும் சதி நடப்பதாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, நீதிமன்ற வளாகத்திலேயே இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாக இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்தது.

இதையடுத்து இம்ரான்கான் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜரானவரை கைது செய்ததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இம்ரான்கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் கூறியது. இதையடுத்து இம்ரான்கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அண்மையில், அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபியின் ஜாமீன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், மே 9 கலவர வழக்கு, நிதி மோசடி வழக்கு உள்ளிட்ட ஆறு வழக்குகளின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்ரான்கானின் மனைவியும் இதே கோரிக்கையுடன் தனியாக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நேற்று (ஜூலை 27) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமீர் பரூக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிபதி அமீர் பரூக் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வழக்குகளை மாற்றுவது தொடர்பாக மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட அரசு ஆணையத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 26ஆம் தேதி, தோஷகானா வழக்கில், விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு தடை கோரி இம்ரான்கான் தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அல்-காதிர் அறக்கட்டளை வழக்கு:

இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் பகுதியில் "அல் காதிர் பல்கலைக்கழக அறக்கட்டளை" உருவாக்கப்பட்டது. இதில், இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி உள்ளிட்ட 4 பேர் நிறுவனர்களாக இருந்ததாக தெரிகிறது. இந்த அறக்கட்டளைக்கு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று பல ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியதாக தெரிகிறது. அதற்கு பதிலாக அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அரசின் உதவிகள் கிடைத்ததாகவும், இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கைதானார்.

இதையும் படிங்க: இந்தியாவின் ஐநா தூதர் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 62வது அமர்வின் தலைவராக பொறுப்பேற்பு!

ABOUT THE AUTHOR

...view details