வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது இந்நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன்கள் குவித்து வந்தனர். ஷிகர் தவான் 50 ரன்களை கடந்த நிலையில், இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது.
இந்தியாவின் அபார பேட்டிங்:தொடர்ந்து ஷிகார் தவான் 58 ரன்கள் எடுத்திருந்தபோது, வால்ஷ் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். இதனிடையே இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது, மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைப்பட்டது.
இதனால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்களில், பவுண்டரிகளாக விளாசி வந்த ஷ்ரேயஸ் ஐயர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சுப்மன் கில், சதத்தை நெருங்கி வந்தார். இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.