பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு, பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன.
குறிப்பாக இம்ரான் கானின் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) கட்சி உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பிடிஐ கட்சிக்கு அளித்த ஆதரவை எம்கியூஎம் (முத்தாஹிதா குவாமி இயக்கம்) கட்சி விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனால், இம்ரான்கானின் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.