மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகக் கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெடித்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட அதிர்வலைகளால் சுமார் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. மேலும், இந்தத் துறைமுகக் கிடங்கிற்கு அருகே இருந்த அனைத்துக் கட்டடங்களும் முழுவதுமாக நாசமாகின.
இந்த விபத்தில் 191 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், இந்த துறைமுகப் பகுதியைச் சுற்றி லெபனான் ராணுவத்தினர் சோதனை செய்துவருகின்றனர்.
அப்போது துறைமுகத்திற்கு அருகில் நான்கு கொள்கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த 4.35 டன் ஆபத்தான அம்மோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். மிகவும் ஆபத்தான இந்த ரசாயனம் எவ்வாறு இங்கு வந்தது, இதன் உரிமையாளர் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.