தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2020, 3:34 PM IST

ETV Bharat / international

பிரான்ஸில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்? இருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டிலுள்ள நைஸ் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்; மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

France knife attack
France knife attack

பிரான்ஸ் நாட்டிலுள்ள நைஸ் என்ற நகரிலுள்ள தேவாலயத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென்று தன் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அருகில் இருப்பவர்களை தாக்கத் தொடங்கினார், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய நபரை பிரான்ஸ் காவலர்கள் கைது செய்தனர். இருப்பினும், கைது செய்யும்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், அந்த நபர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நபர் தனியாகவே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பிரான்ஸ் காவல் துறையினர், அந்த நபரின் பெயர் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இப்போது சம்பவம் நடந்த இடத்தில்தான் இருக்கிறேன். காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இங்குள்ள அனைத்து காரணங்களையும் வைத்து பார்க்கும்போது இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இஸ்லாமிய இறை தூதராக அறியப்படும் முஹம்மது நபி குறித்து வெளிவரும் கேலிச்சித்தரங்களைப் பற்றிய விவாதத்திற்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு ஆசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பேசிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "இந்தத் தாக்குதலால் நம் தேசம் பிளவுபடக்கூடாது. ஏனென்றால், பயங்கரவாதிகளின் விருப்பமும் அதுதான். பிரான்சில் இருக்கும் சில இஸ்லாமியக் குழுக்கள் பிரிவினைவாதத்தை நோக்கி நகர்கின்றனர்" என்று தெரிவித்திருந்தது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் பிரான்ஸ் நடைபெற்றுள்ள இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆப்கானில் தலிபான் தாக்குதல்: 4 நாள்களில் 58 பொதுமக்கள் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details