தமிழ்நாடு

tamil nadu

பிரிட்டன் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்!

By

Published : Nov 9, 2019, 9:50 AM IST

Updated : Nov 9, 2019, 3:30 PM IST

பிரெக்ஸிட்டை மையமாகக் கொண்டு டிசம்பர் 12ஆம் தேதி, பிரிட்டனில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் அந்நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போவதாக முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை இதோ...

brexit

தங்கள் பலவீனத்தைப் பெருமையுடன் வெளிக்காட்டி தம்மை தாமே கேலிசெய்து கொள்வதில் கைத்தேர்ந்தவர்கள் இங்கிலாந்துவாசிகள்!

அவர்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. தயிருடன் மீன் சாப்பிடுவது எப்படி அருவெறுக்கப் படுகிறதோ அதுபோலத்தான் அரசியல்வாதிகளை அந்நாட்டு மக்கள் அருவெறுக்கிறார்கள். என்ன செய்வது, பிரிட்டன் அளிக்கும் சம்பளம் நிறுவனங்களுடன் போட்டிப்போடத் துப்பில்லாத, தற்பெருமை பேசுவதற்கே அரசியல்வாதிகளுக்கு உதவுகிறது' என்கிறார் ஆங்கில எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான அர்டியன் கில்.

பத்து ஆண்டுகளுக்குள் நாட்டை நான்காவது முறையாக பொதுத்தேர்தலுக்கு அழைத்துச்சென்றுள்ள இன்றைய அரசியல்வாதிகளின் மதிப்பு அந்நாட்டு மக்கள் மனதில் எந்த கதியில் உள்ளதோ!

2016 ஜூன் 23ஆம் தேதி பிரிக்ஸிட் வாக்கெடுப்பில், எதிர்பார்ப்புகளுக்கு மாறான முடிவுகள் வெளியானதால் ( ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்தனர்) முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி வலிகினார்.

சமீபத்தில் வெளியான அவரது புத்தகத்தில்(For the Record) , 'பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் முடிவென்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடாது என பாடுபட்டவர்களுக்கு தோல்வியையே தேடித்தந்தது. அது கடைசியில் நாட்டை பிளவுபடுத்தி, அரசை முடமாக்கி, ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்' எனக் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட்

டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டன் மக்களின் பேராதரவை வென்றிடலாம், இதன் மூலம் பிரிக்ஸிட் பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் கை ஓங்கியிருக்கும் என நம்பி 2017ஆம் ஆண்டு தேர்தல் களம் கண்டார் கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே.

ஆனால் கடும் அதிருப்தியிலிருந்த மக்களோ, கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து மேலும் 13 தொகுதிகளை ( டேவிட் கேமரூன் வசம் 330 தொகுதிகள் இருந்தன) பறித்துக்கொண்டனர். இதனால், பிரதமர் தேரசா மே நிலையற்ற சிறுபான்மை அரசாங்கத்தை உருவாக்க வேண்டியதாயிற்று.

பிரெக்ஸிட் பிரிட்டனில் ஆழமான அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் நாட்டை ஆக்கிரமித்திருப்பதாக பிரெஸ்கிட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர், அதனை மீட்டெடுக்க வேண்டுமென அவர்கள் துடிக்கின்றனர். ஆனால், பிரிட்டனின் ஸ்காட்லேண்ட், வடக்கு அயர்லாந்து பிராந்திய மக்கள் பிரிக்ஸிட்டை அறவே எதிர்க்கின்றனர்.

முன்னாள் பிரதமர் தெரசா மேவின் பிரிக்ஸிட் ஒப்பந்தத்தைப் பிரிட்டன் நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்தது. அதனால் வேறுவழியின்றி கடந்த ஜூன் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே

இவரைத் தொடர்ந்து அதிகாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளரான போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அக்டோபர் 17ஆம் தேதி புதிதாக ஒரு பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எட்டினார்.

அப்போது, "நம் நாட்டிற்கான மிகச் சிறந்த ஒப்பந்தம் இதுவாகும். ஐரோப்பிய ஒன்றிய நண்பர்களுக்கும் இது பிடிக்கும் என நான் நம்புகிறேன்" என மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

ஆனால், கூட்டணிக் கட்சியான டொமாக்ரெடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி (Democratic Unionist Party) உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போரிஸின் ஒப்பந்தத்தை எதிர்த்தனர். அது இப்போது தேர்தலில் வந்து நிற்கிறது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக கோடைக்காலங்களிலேயே பிரிட்டனில் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்தமுறை குளிர்காலத்தில் நடைபெறுகிறது.1923 ஆண்டிற்குப் பிறகு குளிர்காலத்தில் தேர்தல் நடப்பது இதுவே முதன் முறையாகும்.

பிரெக்ஸிட்டை இந்தியர் எவ்வாறு பார்க்க வேண்டும் ? பிரிட்டன் அரசு கொள்கைகளை எவ்வாறு இது பாதிக்கும்?

2018 ஜூலை மாதம், இந்தியா வந்திருந்த முன்னாள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே இதுகுறித்து நமக்கொரு கண்ணோட்டம் அளித்திருந்தார்.

"ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேற்றமும், இந்தியாவின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அந்த வாயப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரசா மே கூறிருந்தார்.

இந்திய மாணவர்களுக்கான விசா கெடுபிடிகளை பிரிட்டன் குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்தக் கெடுபிடிகளால் 2010-11 ஆண்டில் 39,090 என்ற அளவில் இருந்த பிரிட்டனுக்குப் படிக்கச்சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016-17ல் 16,550 ஆக குறைந்தது.

இந்தியாவிடம் சுமூகமாகச் செயல்படக்கூடியவர்கள் கன்சர்வேட்டவ் கட்சியினர். கேமரூன் தான் பிரதமராக இருந்தபோது இந்தியாவிற்கு மூன்று முறை ( 2010 ஜூலை, 2013 பிப்ரவரி, 2013 நவம்பர்) பயணம் மேறகொண்டார். இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து வில்பில்டன் மைதானத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

"...பிரதமர் மோடியும், நானும் கட்டித்தழுவியபோது, பரந்த கைகளோடு பிரிட்டன் உலகையே அரவணைக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறது என நான் நம்பினேன்" என்று டேவிட் கேமரூன் கூறினார்.

பிரதமர் மோடியுடன், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்

அதே சமயத்தில், நசிர் அகமது பிரபு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்குச் சென்றவர்) போன்றவர்களை வைத்திருக்கும் லேபர்ஸ் கட்சி தலைவர்கள் வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக இந்தியாவை எதிர்த்து அவ்வப்போது முழக்கமிட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் உள்ள 10.1 லட்சம் பாகிஸ்தான் வம்சாவளியினரில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என தி கார்டியன் ஊடகம் தெரிவிக்கிறது. அவர்கள் வெளி உலகோடு கலக்காமல் மிகமிக நெருக்கமாக உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு லேபர்ஸ் கட்சியினர் அவர்களுக்குச் சாதமாகப் பேசி வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்கின்றனர்.

உதாரணமாக, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஜெரிமி கார்பின் தலைமையிலான லேபர்ஸ் கட்சி 370 சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்த்து அவசர தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை 100-க்கும் மேற்பட்ட பிரிட்டன்-இந்திய நிறுவனங்கள் சாடின. வாக்குவங்கிகளை நிரப்பவே அவர்கள் இவ்வாறு செயல்பட்டனர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பிரிட்டனில் 10.5 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானியர்களை விட படிப்பிலும், ஆங்கில புலமையிலும் வல்லவர்களாவர். ஆனால் அவர்கள் நாடு முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர். பாகிஸ்தான் வம்சாவளியினரை
ஈர்க்கும் செயலில் ஈடுபடும் லேபர்ஸ் கட்சிக்கு இந்தியர்கள் பாடம்புகட்ட வேண்டும்.

சரி இப்போது தேர்லுக்கு வருவோம். கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளுமே கன்சர்வேட்டிவ் கட்சியே ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன. பிரெக்ஸிட், சுகாதாரம் (தேசிய சுகாதார திட்டம்) ஆகியவை தேர்தலின் முக்கியப் பிரச்னைகளாகும்.

ஆனால், சில நேரங்களில் கருத்துக் கணிப்புகள் தவறாக செல்வதுமுண்டு. 2015ஆம் ஆண்டு பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோற்றுவிடும் என பரவலாக கருதப்பட்டது.

எதுவாக இருந்தாலும் சரி, இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் முனைப்போடு போட்டியிடவுள்ளது. இது பிரிட்டனின் தலையெழுத்தினை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இருக்கும்.

Last Updated : Nov 9, 2019, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details