தமிழ்நாடு

tamil nadu

நீடிக்கும் அரசியல் குழப்பம்: கே.பி சர்மா ஒலி நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

By

Published : May 29, 2021, 7:05 AM IST

நேபாளத்தில் கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஒலியன் பேச்சை மறுவார்த்தையின்றி, அதிபர் தேவி பண்டாரி நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து, ஒட்டுமொத்த நேபாளமே காத்துக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, காத்மாண்டுவில் உள்ள பத்திரிகையாளர் (Independent Journalist) சுரேந்திர புயல் (Surendra Phuyal) கூறுவதை இக்கட்டுரையில் காணலாம்.

PM KP Sharma Oli
கே.பி சர்மா ஒலி

நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக நீடிக்கும் அரசியல் குழப்பங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ச்சியாக ஆட்சி கவிழ்க்கப்பட்டு வருவது, அந்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் பித்யா தேவி பண்டாரி மீதும், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

நேபாளத்தின், 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பிரதமருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் இருப்பதாகக் கூறப்படவில்லை. ஆனால், கடந்த ஆறு மாதங்களில், பிரதமர் கே.பி. சர்மா, டிச.,20, மே 22 என இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கவிழ்த்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் சபையைக் கலைக்க பிரதமர் ஒலி பரிந்துரைக்கும் போது, எவ்வித ஆலோசனையும் இன்றி, அதிபர் பித்யா தேவி பண்டாரி அதற்கு செவிசாய்த்ததாக கூறப்படுகிறது. ஒலி பரிந்துரைப்பதை, அதிபர் எந்தவொரு இரண்டாம் சிந்தனையின்றி செயல்படுத்துகிறார். முதலில்,2020 டிசம்பர் 20ல் தான் நினைத்ததை நடத்தி காட்டினார். தற்போது மே 22 நள்ளிரவில், மீண்டும் அதனைச் செய்துக்காட்டியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகமோ, அதிபரின் அலுவலகமோ, அரசியலமைப்பில் மோசடி ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதை முற்றிலுமாக மறுக்கின்றன.

கே.பி சர்மா ஒலி

ஒலி- பண்டாரி நட்பு உருவானது எப்படி?

ஒலி, பண்டாரி ஆகிய இருவரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். கடந்த 1993இல் பித்யா தேவி பண்டாரியின் கணவர் மதன் பண்டாரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, பித்யா தேவியை கட்சியின் உயரத்துக்குக் கொண்டு சென்றதன் விளைவாக, பிரதமர் ஒலியைப் பாதுகாவலராகப் பண்டாரி கருதுவதாகக் கூறப்படுகிறது.

விமர்சகர்கள் கூற்றுப்படி, 2015 அக்டோபர் 28 அன்று நாடாளுமன்ற வாக்கெடுப்புக்குப் பின்னர், உயர்ந்த பதவிக்கு பித்யா தேவி பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், ஒலியின் நோக்கங்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

ஒலிக்கு இவ்வளவு நம்பிக்கை வந்தது எப்படி?

ஒலி இரண்டு காரணங்களுக்காக அவரது ஆதரவாளர்களால் போற்றப்படுகிறார். முதலாவது, 2015 நேபாள அரசியலமைப்பை அறிவித்த சமயத்தில், இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மாதேசி கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, காத்மாண்டுக்கு டெல்லி அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், ஒலி தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதன் விளைவாக ஏற்பட்ட நேபாள - இந்தியா எல்லை முற்றுகை, நேபாளி மக்களுக்குப் பல மாதங்களாக பெரும் கஷ்டத்தை அளித்தது.

இரண்டாவது, 2020 மே 20 அன்று நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்தை ஒலி வெளியிட்டார். இந்த வரைபடமானது, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கைலாஷ் மன்சரோவருக்கு கலபானி - லிம்பியாதுரா- லிபுலேக் பகுதி வழியாக ஒரு புதிய சாலையைத் திறந்த சில நாட்களுக்குப் பிறகு வெளியானது. சாலை திறந்த பகுதியை இந்தியா தனக்கான பகுதி எனக் கூறும் நிலையில், அதை 1816 சுகோலி ஒப்பந்தத்தின்படி நேபாளம் தனக்கு சொந்தமானது எனத் தெரிவித்துள்ளது.

நேபாளம் புதிய வரைப்படம்

மே 22ஆம் தேதி சபை கலைக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. மகாதா தாகூர், ஜனதா சமாஜ்பாடி கட்சியின் ராஜேந்திர மகாதோ உட்பட மாதேசி தலைவர்களின் ஒரு பிரிவு, ஒலிக்கு பின்னால் சாமரம் வீசி வருவது தான்.

புதிய கூட்டணியில் ஒலி

தாகூர்-மஹாடோவிற்கும், ஒலிக்கும் இடையிலான இந்த புதிய திடீர் கூட்டணிக்கானக் காரணம் தெளிவாகத் தெரிகிறது. ஒலி சொல்வதை, வேத வாக்காக அதிபர் தேவி பாண்டா செய்து வருகிறார். எனவே, நேபாள குடியுரிமைச் சட்டம் 2006-ஐ திருத்துவதற்கான மசோதா, ஆகஸ்ட் 2018 முதல் நேபாள நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த நாடாளுமன்றம் கலைப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 20, 2015க்கு முன்னர் நேபாள குடியுரிமையைப் பெற்ற தம்பதிகளின் குழந்தைகளுக்கு, வம்சாவளியைக் கொண்டு நேபாள குடியுரிமையை வழங்குவதற்கான கட்டளை இந்த திருத்த மசோதோ தெளிவுபடுத்துகிறது. மேலும், இது ஒரு நேபாளத்தைச் சேர்ந்த ஒற்றைத் தாயின் குழந்தைகளுக்கு கூட வம்சாவளியைச் சேர்ந்த குடியுரிமை கிடைப்பதற்கான வழியை உருவாக்குகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒலி இரண்டு பிரவிரினடையும் பாராட்டைப் பெற முடியும். தாகூர், மகாடோ போன்ற மாதேசி தலைவர்கள் திருப்தியடைவார்கள். 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து சோகத்தில் மூழ்கிய தெற்குத் தாரைச் சார்ந்த தொகுதி மக்களை சமாதானம் செய்திடமுடியும்.

அதிபர் பித்யா தேவி பண்டாரி

பண்டாரிக்கும், யாதவிக்கும் இடையிலான ஒப்பீடுகள்

நாடாளுமன்றத்தைக் கலைத்திட ஒலியுடன் இரண்டு முறை கைகோர்த்த தேவி பண்டாரியை போல் அல்லாமல், முன்னாள் அதிபர் ராம் பரண் யாதவ் தனது நடவடிக்கைகளால் பெரும் பாராட்டைப் பெற்றார். அவரை நடுநிலையானவர், பாகுபாடற்றவர், கடமை தவறாதவர் என பல ஆய்வாளர்கள் கூறி வந்தனர்

கடந்த காலங்களில் அரசியலமைப்பு சிக்கல்கள் எழுந்த போதெல்லாம், டாக்டர் ராம் பரண் முடிவெடுப்பதற்கு முன்பு, அரசியலமைப்பை ஆராய்வது மற்றும் பிற நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வார். இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்றால், அதனை உடனடியாக பிரதமருக்குத் திருப்பி அனுப்பிவிடுவார். ஆனால், பண்டாரி இம்முறையை துளியளவும் பின்பற்றவில்லை. பண்டாரியின் சமீபத்தில் நடவடிக்கைகளை, முன்னாள் அதிபர் யாதவ்வும் விமர்சித்துள்ளார்.

ஒலி தனது ஆதரவாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கலாம், ஆனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் வெளியையும் புதிய எதிரிகளை சம்பாதித்துள்ளார். அவரது சமீபத்திய நடவடிக்கையால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாகப் பிரிந்தது. ஆனால், 2017 தேர்தல்களுக்கு முன்னர், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாகக் கைகோர்த்துவிட்டன. அதன் முடிவாகத் தான், சிபிஎன்-க்கு ஆதரவு பெருகி , மீண்டும் ஒலியை அதிகாரத்திற்குக் கொண்டு சென்றது.

கடந்த 2017 தேர்தல்களுக்கு முன்னர், மூத்த தலைவர் பிரச்சந்தாவும் ஒலியும் கட்சியின் உயர்மட்ட தலைமையைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. இருவருக்கும் இடையில் கசப்பு வளர இது ஒரு காரணம். இறுதியில், தவறான புரிதல் காரணமாகப் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் வெவ்வேறு நபர்களுடன் கூட்டணி அமைத்து கட்சியைப் பலப்படுத்தினர்.

புதிய தேர்தல் அனைவருக்கும் நீதியை உறுதி செய்யும் என்று ஒலி கூறியுள்ளார். மே 22ஆம் தேதி சபையைக் கலைத்த போது அதிபர் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில், " 271 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஒலியோ அல்லது நேபாளி காங்கிரஸ் தலைவர் டியூபாவோ தவறி, வேறு எந்த தலைவர்களும் இல்லை. எனவே, சபையைக் கலைப்பது தவிர வேறு வழியில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

நேபாளம்

உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது!

இப்போது விஷயம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. கடந்த முறை சபையைக் கலைத்த போதும், இத்தகைய வழக்கை நீதிமன்றம் கையாண்டது. தற்போது, மீண்டும் களமிறங்கியுள்ளது. ஒலி-பண்டாரியின் கூட்டு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான ரிட் மனுக்கள் குறித்து நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதே சமயம், ஒலி - பண்டாரி நடவடிக்கைகள் சரியானது என்பது போன்ற மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாரத் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், 146 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒலி மற்றும் பண்டாரி "அரசியலமைப்பு விதி - பிரிவு 76 முற்றிலும் புறக்கணித்தனர்" என்று வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்பு வரும் வரை, நேபாளத்தில் அரசியல் களத்தின் சூடு தணிய வாய்ப்பில்லை.

ABOUT THE AUTHOR

...view details