தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து - இம்ரான்கான் வரவேற்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தேசிய தின விழாவை முன்னிட்டு, இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 23, 2019, 9:14 AM IST

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

கடந்த மாதம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குண்டு வீசி தகர்த்தது.

இதற்கிடையே, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை சாதுர்யமாக வீழ்த்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்தது.

இரு நாடுகளுக்கிடையே அமைதி திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து, மார்ச் 1ஆம் தேதி கம்பீரமாக வாகா எல்லை வந்த அபிநந்தனை நாட்டு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். எனினும், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பதற்றமாகவே நீடித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இம்ரான்கான், தேசிய தினத்தை கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதம் அல்லாத அமைதியான வளம் பொருந்திய ஜனநாயகம் தலைத்தோங்கும் நாடாக மாற வேண்டிய நேரம் இதுவே என இந்திய பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் இந்த செய்தியை வரவேற்ற இம்ரான்கான், தேசிய தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், இந்தியாவுடனான அனைத்துப் பிரச்னைகளும் விரிவான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய நேரம் இதுவே என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக காஷ்மீர் மைய பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் சமாதானம் மற்றும் வளத்தை பெற்று ஒரு புதிய உறவு உருவாகும் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்தில் நடைபெற்ற தேசிய தின நிகழ்ச்சியை இந்தியா புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details