தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2019, 12:12 PM IST

ETV Bharat / international

விமானம் தயாரித்து வானில் பறந்த பாப்கார்ன் வியாபாரி! நனவான கனவு...

இஸ்லாமாபாத்: சொந்த விமானம் தயாரித்து அதன் மூலம் வானில் பறக்கம் வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை பாப்கார்ன் வியாபாரி நனவாக்கி உற்சாகமாக வானில் பறந்தார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் அரிஃப்வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். இரவு நேரங்களில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் முகமது, பகல் நேரங்களில் பாப்கார்ன் விற்று வருகிறார். ஆனால் இவருக்கு சிறுவயதில் விமானப்படையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

ஆனால் முகமது பள்ளிப் படிக்கும் காலத்திலேயே அவரது அப்பா இறந்துவிட்டதால், தனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். அப்போதைய சூழ்நிலை காரணமாக கனவு கைகூடவில்லை. பின்னர் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று குடும்பத்தினருக்கு உதவியாக இருந்துள்ளார்.

வருடங்கள் கழிந்தாலும் தனது கனவு கலையாமல் பார்த்துக்கொண்டார் முகமது. காலங்களும், வயதும் செல்லச் செல்ல, தனது விமானப்படை கனவான சொந்த விமானம் தயாரிக்க வேண்டும் என்பதாக மாறியது.

இதனையடுத்து வங்கிக்கடனாக ரூ.50 ஆயிரம் பெற்று, தனது சேமிப்புப் பணமான ரூ.50 ஆயிரத்தையும் சேர்த்து ஒரு லட்சத்தில் விமானத்தை தயாரிக்கத் தொடங்கினார். இவரது முயற்சியும் சிந்தனையும்தான் இவருக்கு உறுதுணையாக இருந்தது.

சாலையை கொத்தும் இயந்திரத்தின் எஞ்சின், ஆட்டோ டயர்கள் என கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து தனது கனவுக்கு உயிரூட்டத் தொடங்கினார். தனக்குத் தெரியாத தொழில்நுட்பங்களை இணையதளத்தில் தேடத் தொடங்கி ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு தனது கனவை நனவாக்கும் முயற்சியில் பகீரத முயற்சியில் இறங்கினார்.

ஒருவழியாக சொந்த விமானத்தை தயாரித்து வானில் பறந்தார் முகமது பயாஸ். ஆனால் உரிய அனுமதியில்லாமல் வானில் பறந்ததால், காவல் துறையினர் முகமதுவை கைது செய்து ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதற்காக எல்லாம் எனது கனவினை கைவிட முடியுமா என சிரித்துக்கொண்டே பேசியவரிடம் வானில் பறந்த அனுபவம் குறித்த கேட்கையில், தரையிலிருந்து இரண்டரை அடி உயரத்தில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் விமானத்தில் பறந்தபோது எனது எண்ணத்தில் எதுவும் ஓடவில்லை எனக் கூறினார்.

மேலும், இவரைக் கைது செய்து விடுவித்த பின்னர் இவரது விமானத்தைப் பார்த்து விமானத் துறையினர் பிரமித்துப்போயுள்ளனர். தற்போது விமானத் துறையின் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

எட்டாம் வகுப்பு படித்த தாங்கள் எவ்வாறு விமானம் தயாரித்தீர்கள் எனக் கேட்டதற்கு, சோர்வடையாத உழைப்பும் கனவுமே... என பதிலளிக்கும்போது அவரது முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

தனது சிறுவயது கனவினை நிறைவேற்றியவருக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசின் அனுமதியோடு, உரிய முறையில் உரிமம் பெற்று முகமது பயாஸ் மீண்டும் வானில் பறக்க நாமும் வாழ்த்துவோம்!

ABOUT THE AUTHOR

...view details