2001 செப்டம்பர் 11, நியூயார்க்
...பரபரப்பான நியூயார்க் நகரில் திடீரென வானமே இடிந்துவிழுவது போல் ஒரு பெருஞ்சத்தம். அச்சம் கலந்த குழப்பத்தோடு சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்த நியூயார்க் வாசிகள், உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரம் புகைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அது என்னவென்று கிரகித்துக்கொள்வதற்குள் நியூயார்க் நகரவாசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி. உலக வர்த்தக மையத்தின் மற்றொரு (தெற்கு) கோபுரத்தின் மீது எங்கிருந்தோ வந்த விமானம் ஒன்று மோதி வெடித்தது. சிலநொடிகளில் தாக்குதலுக்குள்ளான இரண்டு கோபுரங்களும் அடுத்தடுத்து சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தது.
அமெரிக்கா, உலக நாடுகளின் பொருளாதார நாடித்துடிப்பாய் செயல்பட்டு வந்த அந்த இரட்டை கோபுரங்கள் கண்ணிமைக்கும் நொடிகளில் தரைமட்டமானது. மக்களின் மரண ஓலங்கள் விண்ணை முட்டின. எங்கு திரும்பினாலும் அழுகுரல் நெஞ்சை அடைத்தது. தொலைத்தொடர்புகள், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நியூயார்க் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
இதனிடையே, தலைநகர் வாஷிங்டனில் பென்டகன் (அமெரிக்க ராணுவத் தலைமையகம்), பென்சில்வேனியா மாகாணத்தின் ஷாங்விலி (Shankville) அருகே உள்ள விவசாய நிலம் ஆகிய இரு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் மோதி வெடித்தன.
உலகநாடுகளை ஆட்டிப்படைத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்டம் கண்டது. மோசமான பின்விளைவுகளையும், உலக அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்திய இந்த கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியது ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்குவைதா பயங்கரவாதிகளாவர்.
தாக்குதலை எப்படி அரங்கேற்றினர் ?
19 அல்குவைதா பயங்கரவாதிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் நான்கு விமானங்களை நடுவானில் கடத்தினர்.
போஸ்டனில் இருந்து லாஸ் ஏன்ஜல்ஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்த 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 11', 'யுனைட்டட் ஃபிளைட் 175' ஆகிய விமானங்கள் இரட்டை கோபுரத்தை நோக்கி இயக்கப்பட்டன.
சரியாக காலை 8:46 மணிக்கு உலக வர்கத மையத்தின் வடக்கு கோபுரத்தை ஃபிளைட் 11 மோதி வெடித்தது. அடுத்து, காலை 9:03 மணிக்கு ஃபிளைட் 175 தெற்கு கோபுரத்தைத் தாக்கியது.
இதனிடையே, டல்லஸ் (Dulles) நகரிலிருந்து லாஸ் ஏன்ஜல்ஸ் நோக்கிச்சென்ற 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 77' விமானம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடத்தின் மீது சரியாக 9:37 மணிக்கு மோதியது.
நியூயார்க்ல் (New York) இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற 'யுனைடட் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 93' என்ற விமானம் பென்சில்வேனியா அருகே ஷாக்ஸ்விலி நகர் அருகே விவசாய நிலத்தில் சரியாக 10:03 மணிக்கு விழுந்து நொறுக்கியது.