தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்து மாணவி தற்கொலையில் மர்மம் - பாக். அரசை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்! - sindh hindu student

கராய்ச்சி: பாகிஸ்தான் சிந்த் பகுதியைச் சேர்ந்த இந்து மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறி கராச்சியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

namrita chandani

By

Published : Sep 18, 2019, 12:38 PM IST

Updated : Sep 18, 2019, 3:24 PM IST

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சிந்த் பகுதியைச் சேர்ந்த இந்து மாணவி நம்ரிதா சந்தனி என்பவர் படித்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரி விடுதியிலுள்ள அவர் அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். நம்ரிதாவின் உடலை மீட்ட காவல் துறையினர், அவர் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்தார் என தகவல் கூறினர். ஆனால், மாணவியின் குடும்பத்தினர் நம்ரிதாவின் இறப்பில் மர்மம் உள்ளது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவியின் சகோதரர் விஷால் சுந்தர் கூறுகையில், “என் தங்கை தற்கொலை செய்யுமளவிற்கு எந்தப் பிரச்னையும் அவளுக்கு இல்லை. அவள் மிகவும் புத்திசாலித்தனமான பெண். மேலும், அவளுக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்தால் யாரோ கொலை செய்தது போல இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டால் கழுத்தில் மட்டுமே காயம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவள் கைகளிலும் கழுத்திலும் கேபிள் வயரை சுற்றி இறுக்கினால் ஏற்படும் காயங்கள் போல உள்ளது. எனவே, காவல் துறையினர் நேர்மையான முறையில் விசாரித்து என் தங்கையின் சாவிலுள்ள மர்மத்தை வெளி உலகுக்குக் கூற வேண்டும்” என சோகத்துடன் கூறினார்.

நம்ரிதா சந்தனி

இந்நிலையில், கராச்சியில் உள்ள பொதுமக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி மாணவியின் மர்ம மரணத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் போராட்டத்தால் கராச்சியின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் ஸ்தம்பித்துள்ளன.

சமீபகாலமாக பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றங்கள், கட்டாயத் திருமணங்கள் ஆகியவை பெருகிவருவதால், மாணவியின் மரணத்திலும் இதுபோன்ற காரணங்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது வன்முறைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் போராட்டம்

ஆனால் இது குறித்து பாகிஸ்தான் அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மௌனம் காத்துவருகிறது சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 12 முதல் 28 வயது வரையிலான ஆயிரம் இளம்பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணங்கள் செய்வதாக சிந்தி அமைப்பு கூறியுள்ளது.

Last Updated : Sep 18, 2019, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details