ஜப்பான் நாட்டின் ஃபுக்குஷிமா மாநிலத்தில் மிஹாரு டக்கிஸாகுரா என்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரம் அமைந்துள்ளது. ஜப்பானிய மொழியில் 'டக்கிஸாகுரா' என்பதற்குக் கனி அருவி என்று பொருள்.
அதன் பெயருக்கு ஏற்றார்போல் 12 மீட்டர் உயரத்துடன் இந்த பிரம்மாண்ட மரத்தின் விழுதுகள் சுமார் 20 மீட்டர் அகலத்துக்கு விரிந்து படர்ந்திருக்கிறது. அக்கிளைகளில் பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிற மலர்கள் ஜப்பானுக்கே உரிய அழகை உணர்த்துகிறது.
கடந்த சில வருடங்களாக இந்த கனி அருவியைக் காண்பதற்கு ஜப்பானியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக இயற்கை விரும்பிகளுக்கு இம்மரம் கண்கொள்ளாக் காட்சி.
ஃபுக்குஷிமாவில் வசித்து வரும் கோகி நகாடா என்பவரிடம் இம்மரம் குறித்து கேட்டபொழுது, "1992ஆம் ஆண்டு மிஹாரு டகிஸாகுரா மரத்தை அரசு தேசிய பொதுச் சொத்தாக அறிவித்தது. அப்போதிலிருந்து இதற்கான மவுசு ஏகபோகமாக வளரத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஃபுக்குஷிமா மாநிலத்தின் பலமாக இந்த மரம் பார்க்கப்படுகிறது" என்றார்.
இதையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணியிடம் கேட்டபொழுது, "இந்த மரத்தைக் காண என் குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். இந்த அழகிய மரத்தைப் பார்க்கச் செய்த அந்த கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்" என்றார்.
பொதுவாக இந்த வகை மரங்கள் 15 இருந்து 20 வருடம் வரை மட்டுமே வாழக்கூடியவை. ஆனால், 1000 ஆண்டுகளைக் கடந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் இதனைப் பராமரித்த ஊழியர்களே புகழுக்குச் சொந்தக்காரர்கள்.
இதையும் படிங்க : இத்தாலியில் நாய், பூனைகளுக்கு வாக்கிங்!