கராச்சி: பாகிஸ்தானில் 31 வயதான இந்து பத்திரிகையாளர் சிந்து மாகாணத்தில் ஒரு முடிதிருத்தும் கடையிலிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் மார்ச் 18ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அஜய் லால்வானி, சுக்கூர் நகரில் முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களிலும், ஒரு காரிலும் வந்து துப்பாக்கிக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். லால்வானி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது தந்தை திலீப் குமார், தனது குடும்பத்திற்கு எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கொலை தனிப்பட்ட விரோதத்தினால் ஏற்பட்டது என்று காவல் துறையினர் கூறியதை அவர் நிராகரித்துள்ளதாகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களுக்கு, மூன்று நபர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொலைக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானின் தேசிய சட்டப்பேரவையில் (MNA) இந்து உறுப்பினரான லால் சந்த் மல்ஹி 'இது மிகுந்த கவலைக்குரிய விஷயம்' என்றும் கூறியுள்ளார்.
சிந்துவின் சலே பாட் என்ற இடத்தில் மற்றொரு பத்திரிகையாளரான அஜய் குமார் கொல்லப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தவர், சிந்துவில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர் என்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்றார்.