தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 21, 2019, 10:45 PM IST

ETV Bharat / international

விஷப் பரீட்சை : சீனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?

ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகும் சூழலில், இந்தியா அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்துக்கு முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் எழுதிய கட்டுரை இதோ...

india china

மத்திய தேசமும் அளப்பறியா லட்சியமும்

சீன மாண்டரின் மொழியில், சீனா என்ற சொல்லுக்கு 'மத்திய தேசம்' - அதாவது உலகின் மையம் என்று பொருள். தன்னை தன்நிகரற்ற சக்தியாகக் கருதும் சீனா, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.

இந்தியா, சீனா என உலகின் இரண்டு மிகப் பழமையான நாகரிகங்களைப் பிரிப்பது இமயமலை தான். இந்தியாவுடன் சீனா எப்போதும் நல்லுறவிலிருந்து வருவதாக அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவருகிறனர். நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தில் வேண்டுமானாலும் அது உண்மையாக இருக்கலாம். 1950களில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி, இருநாட்டு நல்லுறவுகளைத் தொடர்ந்து சோதித்துக் கொண்டேதான் வருகிறது.

சீனாவின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியுடன் அவர்களின் லட்சியமும் ஆஜானுபாகுவாக வளர்ந்து வருகிறது. 2017இன் படி சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிஎஸ்டி) மதிப்பு 12 ட்ரில்லியன் டாலர் (12 லட்சம் கோடி டாலர்), இது இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியானால், பாதுகாப்புத் துறையில் அவர்களின் பட்ஜெட் எத்தனை பெரியதாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

ராணுவத்தை நவீன மயமாக்குவதில் சீனாவுக்கு ஈடுயிணையில்லை. அடுத்து ஐந்தாண்டுகளில் சீன கடற்படையில் புதியதாக 80 கப்பல்கள் சேர்க்கப்படவுள்ளதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா கூறுகிறார். கடந்த 200 ஆண்டுகளில் இதுபோன்று எந்த ஒரு ராணுவமும் அசுர வேகத்தில் வளர்ந்ததில்லை. 2020க்குள் சீன ராணுவம் மூன்று விமானந்தாங்கிகளை பெறப்போகிறது.

ஜீரணிக்கமுடியாத உண்மை

பொருளாதாரம், ராணுவம், இப்போது தொழில்நுட்பம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாளும் சீனா இந்தியாவை விடப் பலமடங்கு பலம்வாய்ந்தே இருக்கிறது என்பதே ஜீரணிக்கமுடியாத உண்மை. இதுகுறித்து முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் பேசுகையில், "சீனா-பாகிஸ்தான் இடையேயான அசைக்கமுடியாத கூட்டணி இந்தியாவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை" என்றார்.

சீனாவின் செல்லப் பிள்ளை

இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், சீனாவின் செல்லப்பிள்ளையாகும். அதற்குப் பரிசாகப் பாகிஸ்தானுக்கு நிதியுதவிகளோடு, ஏவுகணை, அணு ஆயுதம் உள்ளிட்ட ராணுவ உதவிகளையும் வாரி இறைக்கிறது சீனா. பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசிவரும் அதே சீனாதான், இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதி என்று முத்திரைக்குக் குத்த ஐநாவின் முயற்சியை 10 ஆண்டுகள் இழுத்தடித்தது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் புகலிடம் அளித்து வருவதாக பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ள, சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு (Financial Action Task Force) அதனைத் தடைசெய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் (Black List) சேர்க்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த மாதம் பாரிசில் நடைபெறவுள்ள FATF கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும். ஆனால், இக்கூட்டமானது சீனா தலைமையில் நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் நிச்சயம் காப்பாற்றிவிடப்படும்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டுவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிவரும் ஒரே நாடு சீனா தான்.

தீரா எல்லைப் பிரச்னை

சீனாவுடன் 4 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு இந்தியா எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. ஆண்டுதோறும் இதன்வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் நடந்தேறுவதும், அதனை நாம் தடுப்பதும் வழக்கமாகிவிட்டது. 1993ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே அமைதிப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Maintaining Peace and Tranquility) கையெழுத்தானதிலிருந்து , எல்லைப்பகுதிகளில் இருதரப்பினரும் இதுவரை ஒருமுறைகூட ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபடவில்லை.

2017 டோக்லாம் பீடபூமி மோதலுக்குப் பிறகு, ஹுஹானில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், பிரதமர் மோடி முதல்தடவை முறைசாரா சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்கள் இரண்டாவது தடவை முறைசாரா சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.

வீங்கும் வர்த்தகப் பற்றாக்குறை

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் வீங்கிக்கொண்டே செல்கிறது. ( 2017ல் - 51.72 பில்லியின் டாலர், 2018ல் 57.86 பில்லியின் டாலர்). மருத்துவப் படிப்பிற்கு இந்திய மாணவர்கள் சீனா செல்வது, சீன மக்கள் இடையே 'தங்கல்' போன்ற பாலிவுட் படங்கள் வரவேற்பைப் பெறுவது என எத்தனையோ நிகழ்ந்தபோதிலும், எல்லைப் பிரச்னையில் இந்தியா குறித்து சீனா கிஞ்சித்தும் கவலைக்கொள்வதில்லை.

இங்குதான் குவாட் (QUAD) உள்ளிட்ட ஆசிய பசிபிக் கூட்டமைப்புகள் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், புதியப் பட்டுப்பாதை திட்டம், தென் சீன கடலில் கடற்படை ஆதிக்கம் உள்ளிட்டவைகளை வைத்து உலக நாடுகள் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்தியா என்ன செய்யவேண்டும் ?

அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட இந்தோ பசிபிக் நாடுகளுடன் இந்தியா ஆழமான, வலுவான கூட்டணியை உருவாக்கினால் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவும், குறைக்கவும் முடியும்.

ABOUT THE AUTHOR

...view details