லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா சார்பில் நிகழ்ந்த உயிரிழப்பு விவரங்களை அந்நாடு வெளியிடவில்லை. உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்டால் பதற்றம் நிலவி போர் சூழும் அபாயம் ஏற்படும் என சீனா மறுப்பு தெரிவித்தது. கல்வான் மோதலில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்ததாக முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவு லிஜியானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர் பதில் கூற மறுத்துவிட்டார். பிரச்னையை தீர்க்க அரசாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இவ்விவகாரத்தில் வெளியிடுவதற்கான தகவல் எதுவும் என்னிடம் இல்லை என்றார்.