வாஷிங்டன்:நவம்பர் மாதம் நடந்து முடிந்த 46ஆவது அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜே பைடன் 306 எலக்ட்ரல் காலேஜ் இடங்களை பெற்று, 8 கோடி வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பினை வீழ்த்தினார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தொடர் இழுப்பறி நிலவவே, தேர்தலில் முறைக்கேடு நடைபெற்றதாகக் கூறி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்துவந்தார். இதையடுத்து, பல்வேறு மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. பின்னர் அனைத்து வழக்குகளும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், ஜோ பைடன் வெற்றிப் பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பேசிய அவர், அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதில்லை, மக்கள் தான் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்கள். இங்கு ஜனநாயகம் எனும் நெருப்பு நீண்ட காலத்திற்கு முன்னரே ஏற்றப்பட்டுவிட்டது. பெருந்தொற்றாலும் சரி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலும் சரி இந்த நெருப்பை அணைக்க முடியாது. மக்கள் அனைவரும் அடுத்த அத்தியாயத்திற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும" என்றார்.
மேலும், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் செய்து தரப்படும் என்றும், நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
தேர்தல் நெருங்கும் வேளையிலும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சமூதாயத்தில் நிற அடிப்படையிலான பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதையே தீவிரமாகக் கொண்டிருந்தார். அதனாலயே பிரிவினைவாத சிந்தனைக் கொண்டவர்கள் தரப்பிலான வாக்குகளும் தேர்தலில் அவருக்கு கிடைத்தது. தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த ட்ரம்பின் எதிர்ப்புக் குரல்களால் வாஷிங்டன்னில் சாலை கலவரங்கள் ஏற்பட்டன.
சர்வாதிகாரியைப் போன்று செயல்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அரசு அலுவலர்கள், நீதித்துறைகளையும் கடுமையாக சாடினார். அதேபோல், தேர்தலில் முறைகேடுகள் இல்லை என அவருக்கு எதிராக கருத்து தெரிவித்த அரசு அலுவலர்களை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணியிலிருந்து நீக்கினார்.