கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. ஒருபுறம் வைரஸ் (தீநுண்மி) தொற்றாலும் மறுபுறம் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளாலும் அந்நாட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் இரண்டு டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கைத் தளர்த்துமாறு வற்புறுத்தினார்.
இந்நிலையில் சமீபத்தில் வாக்காளர்களிடையே பேசிய ட்ரம்ப், "மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்து, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு என்னை அதிபராக ஆக்குங்கள், 2021ஆம் ஆண்டு நமது பொருளாதாரம் அபார வளர்ச்சியடையும்.
அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் நீங்கள் அற்புதமான எண்களைக் காணப்போகிறீர்கள். சுருங்கச் சொன்னால் அடுத்த ஆண்டில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி இருக்கும்.
அமெரிக்கப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை அடைந்துகொண்டிருந்தது. இந்தக் கரோனாவால்தான் தற்போது மோசமான நிலைக்குச் சென்றுள்ளது" என்றார்.