2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்ய அரசு உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகளால் குற்றசாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தொடர்ந்து சிலர் மீது அழுத்தம் கொடுத்து வருவதாக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, பராக் ஒபாமா நாடாளுமன்றத்தில் விளக்கி, ரஷ்யா தேர்தலில் உதவியதை நிரூபிக்கவேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.
டொனால்ட் ட்ரம்பின் இந்தக் கோரிக்கையை அந்நாட்டின் நாடாளுமன்ற விசாரணைக் குழுத் தலைவர் லின்சே க்ரஹாம் தற்போது நிராகரித்துள்ளார். ”ஒரு முன்னாள் அதிபரை இவ்வாறு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி வற்புறுத்துவது தவறான முன்மாதிரியாகிவிடும்” என ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்தது குறித்து லின்ஸே க்ரஹம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப் பி ஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வருகிற ஜூன் மாதம் எஃப் பி ஐ யின் அறிக்கைகளை நாடாளுமன்ற விசாரணைக் குழு கேட்டறியும் எனவும் க்ரஹம் தெரிவித்துள்ளார்.