சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கியது. இத்தொற்று தற்போது சீனாவில் குறைந்திருந்தாலும் 190-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது.
குறிப்பாக, இத்தொற்றால் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள்தான் கடும் பாதிப்படைந்துள்ளன.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் இத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரண்டு லட்சத்தை எட்டியது. இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 73 ஆயிரத்து 757 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 21 ஆயிரத்து 201ஆக அதிகரித்தது. அவர்களில் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 923 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் 3,708 பேர் இத்தொற்றால் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 997ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரசால் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.