தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நீண்ட கால சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுத்தும் கரோனா! - கோவிட்-19 மன ரீதியான பாதிப்பு

வாஷிங்டன்: கரோனா பரவல் பொதுமக்களிடையே நீண்ட காலம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Mental Health during Corona
Mental Health during Corona

By

Published : May 21, 2020, 5:01 PM IST

கோவிட்-19 பாதிப்பு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, வளர்ந்த நாடான அமெரிக்கா இந்த கரோனா தொற்றால் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்நிலையில், கரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட பெண்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டனர். 2005இல் கத்ரீனா சூறாவளி ஏற்பட்டதிலிருந்து, இப்பகுதியிலுள்ள பெண்களிடம் யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆய்வில், 2005இல் கத்ரீனா சூறாவளி ஏற்பட்டபோது இப்பகுதியிலுள்ள பெண்கள் எந்தளவு மன அழுத்தத்திற்கு உள்ளானார்களோ, அதே அளவுக்கு கரோனா பரவல் காரணமாக தற்போதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கத்ரீனா சூறாவளி ஏற்படுத்திய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என்பது 12 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும், அதேபோல இந்த கரோனா ஏற்படுத்தும் பாதிப்புகளும் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் என்பது கத்ரீனா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட குரூரமானதாக இருக்கலாம் என்று யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் துணைப் பேராசிரியர்களில் ஒருவரான சாரா லோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல், வேலையிழப்பு ஆகியவை இந்த ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அவற்றையும் சேர்த்துக்கொண்டால் பாதிப்புகள் இன்னும் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பொதுச் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கோவிட்-19 தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை மட்டுமின்றி, அது ஏற்படுத்தும் நீண்ட கால உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் பயத்தையும் குறைக்க கோவிட்-19 குறித்து அதிக அளவிலான விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் ஹெச்ஐவி நோயாளிகளின் சிகிச்சைப் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details