குழந்தைகள் மற்றும் அவர்களின் கல்வி நலனுக்கான சேவை அமைப்பான யுனிசெப் உலகளவில் கரோனா பாதிப்பால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து சமூகவியல் நிபுணர் லாரன்ஸ் சாண்டி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலக மக்கள் அனைவரும் தற்போதை சூழலில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை, உயிரிழப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திவருகின்றனர். ஆனால் இந்த அசாதாரண சூழலில் குழந்தைகள் நலன் குறித்த நமது கவனம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு என்பது கோடிக்கணக்கான குழந்தைகளின் உடல்நலனை சார்ந்தது அல்ல. கல்வி, பாதுகாப்பு, வறுமை ஆகியவை குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பு, பொருளாதாரம் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கண்ட நாடுகளில் சராசரி வருவாய் இந்த ஆண்டு கடும் சரிவைச் சந்திக்கும். இந்த நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைகளுக்கான வருவாய் உறுதிப்படுத்துவதில் கடும் சவால் எழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டியது தலையாயக் கடமையாகும்.
அத்துடன் உலகில் உள்ள 150 கோடி மாணவர்களின் கல்வி முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் தாக்கம் அவர்களின் அறிவு நலனில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த லாக்டவுன் வேளையில் பல வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிறார்கள் மீதான வன்முறை என்பது அவர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.