சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம், பட்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இளங்கோ, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் லோக முருகன், தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வாசுகி சிற்றரசு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அதில், 'கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளதாகவும், கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்க சட்டங்களும், நடைமுறைகளும் உள்ள போது, திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு நடைபெற்று வந்தது.