தமிழ்நாடு

tamil nadu

"பல கோடி செலவு செய்தும் மழைநீர் தேங்குவது கேவலம் - நடிகனாக அல்ல வாக்காளராக கேட்கிறேன்" - நடிகர் விஷால் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:57 PM IST

Updated : Dec 5, 2023, 6:37 AM IST

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், பல கோடி செலவு செய்தும் மழைநீர் தேங்குவது தர்ம சங்கடமான, ஒரு கேவலமான விஷயம் எனவும், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து மக்களுக்காக சேவை செய்யுங்கள் என நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ

சென்னை: 'மிக்ஜாம் புயல்' காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.‌ வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். மழை வந்தால் மின்சாரம் துண்டிக்கப்படும்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மாறாத நிலை:சாலையில் தண்ணீர் தேங்கும். இருக்கிற தண்ணீர் எல்லாம் வீட்டிற்குள் புகத் தொடங்கி விடும். நான் அண்ணா நகரில் இருக்கிறேன். என் வீட்டுக்குள்ளேயே ஒரு அடிக்கு தண்ணீர் வந்துவிட்டது. 2015-ல் வெள்ளம் வந்தபோது, எல்லோரும் இறங்கி முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவி செய்தோம். 8 ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருக்கும், ரொம்ப கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு வாக்காளராக கேட்கிறேன்; எம்எல்ஏக்களே வெளியே வாருங்கள்:மழைநீர் வடிகால் திட்டத்தை சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்தது. அது எங்கே தொடங்கி எங்கே முடித்தார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு கோரிக்கை தான், ஒரு வாக்காளராக கேட்கிறேன், நடிகனாக அல்ல.

சென்னையில் உள்ள‌ அனைத்து தொகுதி எம்எல்ஏக்களும் தயவு செய்து வெளியில் வந்து இதனை சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களுக்கு சேவை செய்வதை விடுங்கள். அது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எம்எல்ஏக்கள் அவங்க தொகுதிக்கு வந்து உதவினால், பொதுமக்களுக்கு பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் கொடுக்கும்.

இதையும் படிங்க:சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்..!

இருட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருப்பார்கள்; மூத்த குடிமக்கள் இருப்பார்கள்.‌ என் வீட்டிலும் என் அப்பா, அம்மா இருக்கிறார்கள்; பயந்து போய் உள்ளனர். இது பொதுவாக பிரச்னை. அரசியல் சார்ந்தோ? வேறு எந்த குற்றச்சாட்டும் அல்ல. சின்ன மழைக்கே தி.நகரில் தண்ணீர் தேங்கும். இப்போ எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதை ஒரு தர்ம சங்கடமான கேவலமான விஷயமாக பார்க்கிறேன். இதற்கு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும் அரசு ஊழியர்களும் தயவு செய்து இறங்கி வேலை செய்தால் நன்றாக இருக்கும்.

இது ஒரு முக்கியமான பதிவு. ஏனென்றால், வரி கட்டுகிறோம். எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்துவிடாதீர்கள். இந்த விஷயத்தில், வந்து உதவுவார்கள் என்று தொகுதியில் எதிர்பார்ப்பார்கள். இந்த நேரத்தில் வந்து முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும் நன்றி" என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Last Updated : Dec 5, 2023, 6:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details