சென்னை: தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி போன்ற பாரம்பரிய போட்டிகளில், கால்நடைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அப்போட்டிகளை நடத்த தடைகோரியும், உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட பல்வேறு விலங்கின ஆர்வல அமைப்புகள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதுதொடர்பாக நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்ததது. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மே 18) வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தியே போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என ஒருமனதாக தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்புச் சட்டங்கள் அனைத்தும் செல்லும் எனவும் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது அனைத்து தமிழர்களுக்கும் மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக மாணவர்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இந்த தீர்ப்பினை வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.