சென்னை:கேரளா மாநிலம் விழிஞ்சம் கடலோர எல்லைப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேரள கடலோர காவல் படையினர் சிறியரக படகு ஒன்றை மடக்கி பிடித்தனர். பின்னர் அதில் சோதனை செய்த போலீசார் 300 கிலோ போதைப்பொருள் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஏற்கனவே 13 நபர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 14-ஆவது நபராக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் வரலட்சுமிக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்வதற்காக அவருக்கு என்ன அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டும் வகையில் தான் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியாக இருந்த சபேசன் என்ற நபரை கைது செய்தனர்.
விழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு கடந்த மாதம் திருச்சி மத்திய சிறையில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து அதில் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் முக்கிய குற்றவாளியாக குணசேகரனுக்கு உதவியாக இருந்ததாக ஆதிலிங்கம் சில நாட்களுக்கு முன்பு சென்னை சேலையூரில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆதிலிங்கம் மதுரையை பூர்விகமாகக் கொண்டவர் என்றும் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் குணசேகரனுக்கு பினாமியாக ஆதிலிங்கம் செயல்பட்டதும் மேலும் போதைப் பொருள், ஆயுதம் கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை கிரிப்டோ கரன்சி மற்றும் ஆதிலிங்கம் நடத்தும் அரசியல் கட்சி, சினிமாக்களில் முதலீடு செய்ததும் தெரியவந்ததுள்ளது. இன்னும் ஒரு வார காலத்தில் ஆதிலிங்கத்தை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை செய்ய உள்ளதாகவும் அதன் பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படும் ஆதிலிங்கத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணிபுரிந்ததாகவும் தற்போது அவருடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் என்ஐஏ தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:முதியோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்!