சென்னை:வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், நடிகர் மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம், 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஒரே திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் நகர்ப்புற பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த கதை, மேலும் இளமை துள்ளலாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் இன்று (டிச.31) நடைபெற்றது. விரைவில் படத்தின் பாடல்களும் வெளியாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மஹத் வடசென்னையைச் சேர்ந்த ஃப்ரீவீலிங் பையனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். படம் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்தாலும், இதில் சில உணர்ச்சிகரமான தருணங்களும் இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா மற்றும் மஹத்தின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நிச்சயம் ரசிகர்கள் மனதைக் கவரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.