சென்னை: பிரபல தொலைக்காட்சியில் 'நாளைய இயக்குநர்' என்ற நிகழ்ச்சியின் மூலம் குறும்படங்கள் இயக்கி, பின்னர் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது முதல் படமான 'பீட்சா' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்கிய 'ஜிகர்தண்டா' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
அப்படத்தில் நடிகர் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
முன்னதாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று (நவ.4) இப்படத்தின் டிரெய்லர், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 10ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியாக உள்ளது.