சென்னை: மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (75), மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்த மோகன், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கிலி முருகன் கதை எழுதி, கங்கை அமரன் இயக்கிய ’கும்பக்கரை தங்கையா’ என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
கும்பக்கரை தங்கையா படத்தில் பிரபு, கனகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகர் மோகன், அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளில், இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, வீரன் ஆகிய படங்கள் நடிகர் மோகனுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. கடைசியாக ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த வீரன் படத்தில் நடித்திருந்தார்.