சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக கேரளாவின் மாநகரமான கொச்சிக்குச் சென்றனர். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமாரின் பிரமாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
'கோப்ரா' திரைப்படத்தை, தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தைப்பற்றி, ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை தூண்டிவிடும் வகையில், அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் படக்குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள ரசிகர்களை சந்திக்கும் வகையில் கொச்சிக்குச் சென்றனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.