தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

10 ஆண்டுக்கு பிறகு 'தமிழ்' கம்பேக்.. நடிகை பிரியாமணி குஷி! - tamil cinema news

நடிகை பிரியாமணி நடித்துள்ள "டிஆர்56" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழில் தான் நடித்த படம் வெளிவருவதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தமிழில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை பிரியாமணி தெரிவித்தார்.

Audio
Audio

By

Published : Nov 22, 2022, 1:29 PM IST

சென்னை: பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, "பருத்திவீரன்" படம் மூலம் தேசிய விருது அங்கீகாரம் பெற்ற நடிகை பிரியாமணி, பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, "டிஆர்56" (DR 56) என்ற திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியுள்ள இப்படத்தில், பிரவீன் ரெட்டி கதை - திரைக்கதை எழுதி, நாயகனாகவும் நடித்துள்ளார். ஹரி ஹரா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தமிழ், கன்னட மொழிகளில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்தும், பான் இந்தியா படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.

'கேஜிஎஃப்', 'காந்தாரா' படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் இப்படத்திற்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார். 'சார்லி 777' படத்துக்கு இசையமைத்த நோபின் பால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், "டிஆர்56" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய நடிகை பிரியாமணி, "தமிழில் 'சாருலதா' படத்திற்கு பிறகு நான் நடித்து வெளிவரும் படம் 'டிஆர்56' என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன். இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த, நடந்து கொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், 'நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும் என்று சொன்னேன்.

நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்திருக்கு. இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே பிரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன்.

இது மருத்துவ மாஃபியா கும்பலை பற்றிய படம். இதில் ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறேன். இந்த கதையை எழுதி, தயாரித்து, நடிகராகவும் அறிமுகமாகும் ப்ரவீன், மிகச்சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். சமூகத்துக்கு தேவையான மெசேஜ் உள்ள இந்தப்படத்தை அக்கறையுடன் வெளியிடும் ஏ.என். பாலாஜி சாருக்கு நன்றி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். பத்து வருடம் கழித்து நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்க்கிறேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன். அதுக்கு எல்லோருடைய ஆதரவும் தேவை" என்றார்.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ப்ரவீன் ரெட்டி பேசும்போது, "இது எனக்கு முதல் படம்தான். ப்ரியாமணி நடிக்க சம்மதித்த பிறகே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். ஒருவேளை அவர் நடிக்க மறுத்திருந்தால், இந்த படமே வந்திருக்காது. நம் வாழ்க்கையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் தொகுப்பே இந்தக் கதை. 'DR 56' என்றால் படத்தின் நாயகன் 56 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு மாத்திரை போட வேண்டும். அப்போதுதான் அவன் உயிருடன் இருப்பான். அது ஏன்? எப்படி? என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது, புரிந்து கொள்வீர்கள்" என்றார்.

படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா பேசும்போது, "இந்த கதையை ப்ரவீன்தான் எழுதினார். இது ஒரு யுனிவர்சல் சப்ஜக்ட். தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால், ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பது சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ப்ரவீன் மற்றும் ப்ரியாமணிக்கு நன்றி" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கெளரவ், ராகவன், ராஜராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: OTT-யில் வெளியாகும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'தி லாஸ்ட் ஃபிலிம் ஷோ' ...

ABOUT THE AUTHOR

...view details