சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறைப் பயணத்தின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில், நேரலை இசை நிகழ்ச்சி (Live In Concert) கடந்த செப்.10ஆம் தேதி பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம் என்று பல்வேறு படிநிலை விலையில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், அரங்கினுள் கூட்டம் அலை மோதியதாக கூறி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வைத்திருந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் டிக்கெட் வைத்திருந்தவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும், மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இசை நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு முறையான வாகன நிறுத்தம் செய்யப்படாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்ட நிலையில், ஏஆர் ரஹ்மான் அத்தனை குளறுபடிகளுக்கும் தானே பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதாக தெரிவித்திருந்தார்.