சென்னை: பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'. ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ள இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பேரரசு, பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர் முக்தார், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது இயக்குனர் பேரரசு பேசுகையில், பனையேறிகளின் வாழ்க்கையை இயக்குனர் நந்தா அற்புதமாக படமாக்கியுள்ளார். இது போன்ற படங்களை முழுமையாக தெரிந்தவர்கள் தான் எடுக்க முடியும். முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கள்ளுக்கடைகள் இருந்தன. கள்ளு குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் வந்துவிட்டது.
கோயில்களில் மட்டும்தான் மதுபானம் இல்லை. இயக்குனர் கோயில்களிலும் கள்ளு விற்க சொல்வது சரி வராது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கள்ளு டாஸ்மாக் கடையிலேயே விற்பனை செய்ய வேண்டும். தமிழகம் என்று சொல்வதா தமிழ்நாடு என்று சொல்வதா தெரியவில்லை. இதில் ஒரு அரசியல். இது தமிழ்நாடு அதை யாராலும் மாற்ற முடியாது. அம்மாவை அன்னை என்றும் சொல்லலாம்.
கள்ளுக்கடைகளால் விவசாயிகள் வாழ்வார்கள். சாராய ஆலைகள் மூலம் தனியார் வாழ்கின்றனர். தமிழகத்தில் இனி டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்வதை வரவேற்கிறேன். ஆனால் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஒருசார்பாக இருக்க கூடாது. குறிப்பிட்ட கட்சியை மட்டுமே கேள்விகேட்க கூடாது. அதனை மக்கள் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும் கட்சியினரை கேள்விகேட்க வேண்டும் என்றார்