வாரணாசி: பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தற்கொலை வழக்கில் அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீது சாராநாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து இருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த நடிகை அகன்ஷா துபே அங்குள்ள ஹோட்டலில் தங்கிருந்த நிலையில் நேற்று (மார்ச் 26) தற்கொலை செய்து கொண்டார்.
ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் அகன்ஷா துபேவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருடன் சென்றிந்த படக்குழுவின் உடன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகை அகன்ஷா துபேவின் குடும்பத்தார், போஜ்புரி பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அதோடு சாராநாத் போலீசாரிடம் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையிலேயே தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாடகர் சமர் சிங் - அகன்ஷா துபே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது மகளை துன்புறுத்தி வந்ததாக அகன்ஷாவின் தாயார் குற்றம்சாட்டி உள்ளார்.