தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரசியலுக்கு வராதது ஏன்? - மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்!

முன்னாள் துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

By

Published : Mar 12, 2023, 7:28 AM IST

Actor Rajinikanth revealed the reason why he did not enter politics
Actor Rajinikanth revealed the reason why he did not enter politics

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியில் தனியார் மருத்துவமனையின் 25 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் நடிகர் ரஜினிகாந்த், பத்திரிகையாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த், முன்னள் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு உரையாற்றினார்கள். இதில் சிறுநீரக பாதிப்பு காரணமாகவே தான் அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஏன் அரசியலில் வரவில்லை என்பது குறித்து முதல் முறையாக ரஜினிகாந்த் மனம் திறந்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இல்லை. ஆனால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற முயற்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருந்தது. "நான் எப்படி வருவேன், எப்போது வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு கண்டிப்பாக வருவேன்" என தனது திரைப்படங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் கடந்த 25 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் கூறி வருகிறார்.

கர்நாடகாவில் பேருந்தின் நடத்துனராக இருந்த ரஜினிகாந்த், 1980களில் தமிழ்நாட்டில் திரைப்பட நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கினார். தமிழக மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்படுகிறார். 1990 கால கட்டங்களில் ரஜினிக்கு அரசியல் ஆசை வருகிறது.

அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். ரஜினியின் அரசியல் ஆசையை கணித்த ஜி.கே.மூப்பனார், தனது கட்சியில் சேர்த்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் திரைப்பட உலகில் உச்சக்கட்டத்தில் இருந்ததால் ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

1991ஆம் ஆண்டு அதிமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். அந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் மீதும், ஜெயலலிதாவின் தனிபட்ட செயல்பாடுகள் மீதும் மக்களுக்கு அதிருப்தி இருந்தது. தமிழ்நாடு திறமையற்ற நிர்வாகத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

1996ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஜி.கே.மூப்பனார், ரஜினிகாந்த்தை ஒரு முகமாகவோ, குரலாகவோ பயன்படுத்துகிறார் எனக் கூறப்பட்டது. அதே காலகட்டத்தில் அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். அண்ணாமலை திரைப்படத்தில் நடிகர் ரஜினி ஓட்டிய சைக்கிள் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.

இதனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த தாமக, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, திமுக-தமாக கூட்டணி பலம் மற்றும் ரஜினியின் குரல் ஆகியவை பயன்படுத்தி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி நடைபெற்று மீண்டும் 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தது.

அப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் கூறி தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் மாற்றிக் கொண்டார். அப்போது இருந்து ஜெயலலிதாவும், கருணாநிதியும் தீவிர அரசியலில் இருக்கும் வரை வெளிப்படையாக ரஜினிகாந்த் அரசியல் பேச முடியவில்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, "2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் போருக்கு தயாராகுங்கள்" என தனது ரசிகர் மன்ற தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு உறுதி அளித்தார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என கூறிய 2 மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். எழுவர் விடுதலை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, 'அப்படி என்றால் என்ன என்று தெரியாது' என ரஜினி கருத்து தெரிவித்திருந்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறிய நிலையில் கொள்கை என்ன என்ற கேள்விக்கு, 'கொள்கையை கேட்டால் தலைசுற்றல்' ஏற்படுகிறது என கூறினார். இது போன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு புறம் நடிகர்கள் எப்படி நாட்டை ஆள முடியும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் தமிழரே இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பல விமர்சனங்களை சுமந்து கொண்டு பயணம் செய்து கொண்டிருந்த ரஜினி, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், "ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும். அப்பொழுது நான் முழுமையாக அரசியலில் இறங்குவேன்" என கூறியிருந்தார்.

2020ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி கொரோனா காரணமாக முதல் ஊரடங்கு போடப்பட்டது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ரஜினியின் பங்களிப்பு ஜனநாயக கடமையோடு மட்டுமே முடிந்து விட்டது.

சில மாதங்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் அரசியலில் ரஜினிகாந்த் மீண்டும் ஈடுபட உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் தரப்பிடமிருந்து அப்படி எதுவும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

1996ஆம் ஆண்டு ரஜினியின் ஆதரவை வைத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றது போல, 2024 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் அமைக்கும் கூட்டணிக்கு ரஜினியை ஆதரவு கொடுக்க வைப்பதற்கான வேலைகளில் பாஜக மேலிடம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்ட சிறுநீரகம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்த போது கொரோனா பரவல் ஏற்பட்டது. அதற்கான மருந்துகளை எடுத்து கொண்டிருக்கிறேன். சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் அறியுறுத்தினார்கள்.

அப்படி சென்றால் 10 அடி இடைவேளையில் தான் பொதுமக்களை சந்திக்க வேண்டும் என கூறினர். பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் கூறியதால் தான் அரசியலிலிருந்து விலகினேன். பொதுக் கூட்டத்திற்கு செல்லும் போது, அனைவரும் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால் 10 அடி இடைவேளை விட்டு எப்படி மக்களை சந்திக்க முடியும்.

இதை வெளியில் சொல்ல முடியாத நிலை இருந்தது. சொன்னால் அரசியலுக்கு வருவதற்கு ரஜினி பயந்துவிட்டார் என கூறுவார்கள். உடம்பு தான் முக்கியம் எனவும் உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை ஊடகங்கள் மூலம் நான் மக்களுக்கு தெரிவிக்கிறேன் என மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தார். அதற்கு அடுத்து தான் அரசியல் இருந்து விலகுவதாக அறிவித்தேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "நான்கரை ஆண்டுகால உழைப்புதான் அமைச்சர் பதவி" - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details