சென்னை: நடிகர் கமல் ஹாசன் தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் அவரது கலைப்பயணத்தின் பக்கங்கள் சிலவற்றை திறந்து பார்க்கலாம். 'கமல்ஹாசன்' என்ற பெயர் கேட்டாலே தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள்தான் கண்முன் வரும். சினிமாவை தொழிலாக பார்ப்பவர்கள் மத்தியில் கலையாக பார்த்தவர் கமல்ஹாசன். 60 ஆண்டுகளுக்கும் மேல் சினிமா உலகில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் என்றால், அதன் பின்னால் அவரது உழைப்பும் திறமையும் நிறைந்து இருக்கிறது.
1954ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்த கமல் ஹாசன் 1960ஆம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பால் மணம் மாறாத பிள்ளையாக 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று பாடி நடித்த தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றார். அதனை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன்பிறகு மலையாளத்தில் கன்னியாகுமரி என்ற படத்தில் நாயகனாக நடித்த இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகன் ஆனார்.
இப்படத்தில்தான் ரஜினிகாந்தும் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினியும் கமலும் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர். நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதை நிறுத்தி விட்டு தனித்தனியாக நடிக்க தொடங்கினர். அப்படி கமல் ஹாசன் தனி நாயகனாக உருவெடுக்க பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் போன்றோர் முக்கிய காரணமாக அமைந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சகலகலா வல்லவன் போன்ற படங்களில் நடித்து கமர்ஷியல் ரூட்டில் பயணித்த கமல்ஹாசன், பாலச்சந்தர் படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடித்து வந்தார். பாலு மகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படம் கமலின் நடிப்புக்கு மகுடம் சூட்டியது. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. ஆரம்பகாலத்தில் காதல் மன்னனாக வலம்வந்த கமல்ஹாசன் எண்பதுகளில் தனது சினிமா வாழ்வின் பொற்காலத்தில் இருந்தார். ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்தார். ஃபிலிம்பேர் விருதுகள் மட்டும் 18 பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் 'எனக்கு விருது கொடுக்க வேண்டாம் இளைஞர்களுக்கு கொடுங்கள்' என்று ஃபில்ம்பேருக்கு கடிதம் எழுதியது எல்லாம் தனிக்கதை.