தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு - கரூர் செய்திகள்

மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது குறித்து நான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக பேசிவருவதாகக் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

senthil balaji replied to kamal hassan
senthil balaji replied to kamal hassan

By

Published : Mar 18, 2021, 8:13 AM IST

கரூர்:கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மார்ச் 17ஆம் தேதி இரவு கடம்பங்குறிச்சி, நன்னியூர், செவ்வந்திபாளையம், சிந்தாயூர், துவரைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி ஆற்றுப்படுகைகளிலிருந்து உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இந்த அடிப்படைகூட நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு தெரியவில்லை.

கரூர் மாவட்டத்தில் சுமார் 15,000 மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ள முடியாததால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை செய்தால், அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை உள்ளது என மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். காரணம், இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அது பாதிக்கப்படும் என்பதற்காகவே மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில்தான் இந்த உத்தரவாதத்தை மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், மாட்டு வண்டியில் மணல் அள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தேன்.

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு இதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. கரூர் மாவட்ட காவிரி ஆற்றங்கரையில் ஐந்து இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் உள்ளூர் தேவைகளுக்கு மணல் அள்ள இடம் தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இன்றுவரை முறையான அரசு ஆணை வெளியிடப்படவில்லை.

கொல்லைப்புறமாக நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இது தெரியாமல் கமல்ஹாசன் அரைவேக்காடு போலப் பேசுகிறார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details