சென்னை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு கருத்துகளை பேசி வருகிறார். அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் இறந்ததற்கு மோடி கொடுத்த அழுத்தமே காரணம் என அவதூறு கருத்துகளை தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
அரசியல் ஞானம் இல்லாமல், உதயநிதி ஸ்டாலின் கீழ்தரமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. உதயநிதியின் பேச்சைக் கண்டித்து சுஸ்மா சுவராஜின் மகள் மற்றும் அருண் ஜேட்லியின் மகள் ட்வீட் செய்துள்ளனர்.
அவதூராக பேசிவரும் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவதை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் சோதனையிட்ட போது 15 வாக்கு பதிவு இயந்திரங்கள் திமுகவிற்கு சாதகமாக இருந்ததால், அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்க்க வேண்டுமெனவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் மகள் மற்றும் மருமகன் இல்லத்தில் வருமானவரியினர் சோதனை குறித்து துரைமுருகன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “துரைமுருகன் எப்போதும் நகைச்சுவையாக பேசக் கூடியவர். அனைத்து கட்சி வேட்பாளர்கள் இல்லத்திலும் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது என்றார். தொடர்ந்து பாஜக சார்பில் யார் அவதூறு கருத்து பதிவிட்டாலும் புகார் அளிக்கலாம்” என்றார்.
இதையும் படிங்க:பாஜக கூட்டணி வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்துகிறது- திமுக குற்றஞ்சாட்டு