காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டுத் தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.
ரூ.200 கோடி முறைகேடு
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் 200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆனால் முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழ்நாடு நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டுதான் தெரியவந்தது.
இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.
8 பேர் மீது 7 வழக்குகள்
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்து உத்தரவு
கடந்த மார்ச் மாதம் பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில் மேலும் 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது.