தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

'மது அருந்தாததால் ரூ.5000 கொடுத்தால் போதும்' - கையூட்டுப் பெற்ற போக்குவரத்துக் காவலர் கைது

சென்னை: வாகன தணிக்கையின்போது ரூ.5000 கையூட்டுப் பெற்ற போக்குவரத்து உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.

By

Published : Feb 20, 2021, 2:00 PM IST

police
police

சென்னை குரோம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் பிப்ரவரி 18ஆம் தேதி தாம்பரம் டிபி மருத்துவமனை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசோக் நகரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் சுற்றுலா வாகனத்தில் தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டைக்குச் சென்றார்.

டிபி மருத்துவமனை அருகே U வளைவில் சென்றபோது, அங்கு பணியில் இருந்து போக்குவரத்து காவலர்கள் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சிவகுமார் ஆகியோர் ஏழுமலை சென்ற வாகனத்தை வழிமறித்தனர். பின்பு அவரது ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்தில் இருந்த சாவியையும் எடுத்துக்கொண்டு ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு வலியுறுத்தினர்.

பணம் தர மறுத்த ஏழுமலை நான் மது அருந்தவில்லை, எதற்கு அபராதம் கட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதற்குப் பதில் சொல்ல மறுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அதிகார போதையில், "10,000 ரூபாய் தந்தால் வண்டியைத் தருவேன். பணம் தராவிட்டால் டிடி வழக்கில் உன்னை உள்ளே தள்ளிவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார். பின்பு மது அருந்தாததால் ரூ.5000 தந்தால் போதும் என கிருஷ்ணகுமார் கேட்டுள்ளார்.

இதையடுத்து, ஏழுமலை உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தார். பின்பு லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த அறிவுரையின்படி மை தடவிய ஐந்தாயிரம் ரூபாயை உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரிடம் ஏழுமலை கொடுத்துள்ளார். இதனை மறைமுகமாக இருந்து நோட்டமிட்ட துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையூட்டுப் பெற்ற போக்குவரத்து உதவி ஆய்வாளரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

குரோம்பேட்டை காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர் நீதிபதி முன் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் உடன் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவகுமார் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளது.

கையூட்டுப் பெற்ற காவலர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சக காவல் துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சாலையில் சென்ற பெண்ணிடம் 4 சவரன் செயின் பறிப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details