தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2021, 9:46 AM IST

Updated : Oct 8, 2021, 10:19 AM IST

ETV Bharat / crime

ஸ்நாப்டீல் பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளை: துலவும் சைபர் கிரைம் போலீஸ்

சென்னையில் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பெயரில் இலவசமாக காலணி அனுப்பி, லட்சக்கணக்கில் பரிசுத்தொகை விழுந்ததாக ஏமாற்றி பணமோசடி செய்த டெல்லி சைபர் மோசடி கும்பல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்நாப்டீல் பெயரில் லட்சணக்கில் கொள்ளை
ஸ்நாப்டீல் பெயரில் லட்சணக்கில் கொள்ளை

சென்னை: சில நாள்களுக்கு முன்பு ஆன்லைனில் ஸ்நாப்டீல் (snap deal), ஷாப் க்ளூஸ் (shopclues) என்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில் பொருள்கள் வாங்குவதற்காக முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்து உறுப்பினராகி உள்ளார்.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு இலவசமாக காலணி ஒன்று ஸ்நாப்டீல் இணையதளத்திலிருந்து வினோத் வீட்டிற்கு பரிசுப்பொருளாக அனுப்பியுள்ளனர். அடுத்த நாள் வினோத்தை ஸ்நாப் டீல் நிறுவனத்திலிருந்து தொடர்புகொண்டு 18 லட்ச ரூபாய் பரிசு பணம் விழுந்து இருப்பதாகக் கூறி, வாட்ஸ்அப்பில் காசோலை அனுப்பி உள்ளனர்.

மேலும் இந்த 18 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றால், குறைந்தபட்ச தொகை வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். முதற்கட்டமாகப் பரிசுத் தொகையில் ஒரு விழுக்காடு தொகையான 18 ஆயிரம் அனுப்பினால் உடனடியாக பணம் அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஐந்து தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதை ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் இணைக்குமாறு லிங்க் அனுப்பியுள்ளனர். அதன்படி கணக்கைத் தொடங்கி இணைத்துள்ளார். மேலும் பரிசுத்தொகையைச் செலுத்த செயல்முறை கட்டணம் எனக் கூறி படிப்படியாக ஐந்து லட்சம் ரூபாய் வரை வினோத்தைச் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

பிரபலமான ஆன்லைன் விற்பனை நிறுவனம் என நம்பி சிறுகச் சிறுகச் சேமித்துவைத்த பணத்தைக் கொடுத்துள்ளார். அதன்பின்னும் 55 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறும்போது, நண்பரிடம் கடன் வாங்கிச் செலுத்தலாம் என வினோத் திட்டமிட்டுள்ளார்.

அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவரிடம் பணத்தைக் கேட்கும்போது, மோசடி கும்பல் என நண்பர் சிவக்குமார் எச்சரித்ததன் மூலம், வினோத் தான் ஏமாந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதற்கட்டமாக விசாரணை செய்ததில் டெல்லியைச் சேர்ந்த கும்பல், அங்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேறு யாரும் ஏமாந்துவிடக் கூடாதே என்ற அடிப்படையிலும், விரைவாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வினோத் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து புகார் அளித்த பின்னரும் அந்த மோசடி கும்பல் தொடர்பிலேயே இருப்பதாகவும், இன்னும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் பரிசுத் தொகை அனுப்பப்படும் என ஆசைவார்த்தை காட்டிவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்நாப்டீல் பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துக் கொண்டிருக்கும்போது, ஆணையர் அலுவலகத்திலிருந்து மோசடிக் கும்பலுக்குத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். கும்பலைச் சேர்ந்தவர்களும் பணத்தைச் செலுத்துமாறு தொடர்ந்து அவரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

முதலில் இந்தியில் பேசியதாகவும், வினோத் தனக்குத் தெரியாது எனத் தெரிவித்தவுடன் தமிழில் பேசி தன்னை ஏமாற்றியதாக வினோத் புகாரில் தெரிவித்துள்ளார். இதுபோன்று பிரபல நிறுவனங்களின் பெயரில் இலவசமாக ஒரு பொருளை அனுப்பி, லட்சக்கணக்கில் பரிசு விழுந்ததாகக் கூறினால் நம்ப வேண்டாம் எனவும், அதற்காகப் பணத்தைச் செலுத்தி ஏமாறாதீர்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 8, 2021, 10:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details